ஓபிஎஸ் - எடப்பாடி சந்திப்பதால் பொருளாதாரம் உயரப் போகிறதா? வேஸ்ட்.. அமைச்சர் செந்தில் பாலாஜி சுளீர்!
முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் பொதுவெளியில் விவாதம் செய்ய நான் தயார்.. அவர் தயாரா? என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார்.
ஈரோடு : "ஓபிஎஸ் - ஈபிஎஸ் சந்திப்பதால் நாட்டின் பொருளாதாரம் உயரப் போகிறதா? மக்கள் சுபிட்சம் அடைவார்களா? இல்லை இலங்கை பிரச்சனை தான் தீருமா? ஏற்கனவே ஒன்றாக இருந்து, தேர்தலை சந்தித்தபோது எத்தனை இடங்களில் வெற்றி பெற்றார்கள்?" என விமர்சித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரத்தில், அதிமுகவில் ஈபிஎஸ் அணி வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் நிற்பதால் ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார். ஓபிஎஸ் இந்த இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில், அதுகுறித்த கேள்விக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

தேர்தல் முடிந்ததும்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரப்பன் சத்திரம் பகுதியில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "திமுக தேர்தல் அறிக்கையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை 200 யூனிட்லிருந்து 300 ஆகவும், விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட் ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தோம். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அந்த அறிவிப்பினை வெளியிட முடியவில்லை. தேர்தல் முடிந்ததும் தமிழகம் முழுவதும் விசைத்தறி, கைத்தறிகளுக்கான இலவச மின்சார அளவை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.

சரிக்கட்டவே உயர்வு
மேலும் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்ததும், மின் கட்டணம் 180 சதவீதம் உயர்த்தப்பட்டது. திமுக ஆட்சியில் தற்போது 30 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில், அடுக்குமாடி குடியிருப்புகளில் நீச்சல் குளம், திரையரங்கு போன்ற வசதிகள் உள்ளன. எனவே தான் அதற்கு தனியாக வணிக மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மின்வாரியத்திற்கு 1.5 லட்சம் கோடி கடன் சுமை ஏற்பட்டது. அதை சரிக்கட்டவே தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டது எனத் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில்
மேலும், அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலம் என்று பேசினாலும், ஒரு மெகா வாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யவில்லை. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால்தான், தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகரித்தது. தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின்மிகை மாநிலம் என அதிமுக ஆட்சியில் அறிவித்துக் கொண்டார்கள். மின் கட்டண உயர்வு பற்றி பேசும் அதிமுக, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நூல் விலை உயர்வு குறித்து பேசுவதில்லை. மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தவில்லை.

தங்கமணிக்கு சவால்
தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பை வழங்கினோம். அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி, மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து காணாமல் போனது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை அறிக்கை வெளிவரும். அதிமுக ஆட்சியில் மின் துறையில் நடந்த தவறுகள் குறித்து, முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் பொதுவெளியில் விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். அவர் தயாரா? என சவால் விடுத்தார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைவதால்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, ஓபிஎஸ் - ஈபிஎஸ் சந்திப்பதால் நாட்டின் பொருளாதாரம் உயரப் போகிறதா? மக்கள் சுபிட்சம் அடைவார்களா? இல்லை இலங்கை பிரச்சனை தான் தீருமா? என்ன நடக்கப் போகிறது? ஒன்றுமே இல்லை. ஏற்கனவே ஒன்றாக இருந்தவர்கள், தேர்தலை சந்தித்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றார்கள்? தேர்தல் களமான ஈரோடு பெரியார் மண். ஈரோட்டு மண் மகத்தான வெற்றியை கை சின்னத்திற்கு கொடுக்கத் தயாராகி வருகிறது.

அதிமுக ஒன்றுபட்டாலும்
அதிமுக ஈபிஎஸ் அணி பாஜகவின் பி டீமாக செயல்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று பாஜக வாங்கிய வாக்கு சதவிகிதம் எவ்வளவு? அதிமுக ஒன்றுபட்டாலும், இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் திமுக தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். இந்த இடைத்தேர்தல் மட்டுமல்லாமல் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் வெற்றி பெறச்செய்வார்கள்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications