காங்கிரஸை படு குழியில் தள்ளிக் கொண்டிருக்கிறாரா ராகுல் காந்தி?

Subscribe to Oneindia Tamil

- ஆர்.மணி

சென்னை: காங்கிரஸ் கட்சியில் பெரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டுமென்று கூறி அக் கட்சியின் 23 பெரிய தலைவர்கள் எழுதிய கடிதம் கிளப்பிய சலசலப்பு சற்றே ஓய்ந்திருக்கிறது. ஆனால் இந்த அமைதி தாற்காலிகமானதுதான், இது ஒரு வகையில் புயலுக்கு முந்தய அமைதிதான் என்றும், இனிமேல் தான் அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேற காத்திருக்கின்றன என்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகின்றது.

இந்த 23 தலைவர்கள் எழுதிய கடிதத்தின் முக்கியமான கோரிக்கை காங்கிரஸூக்கு உட்கட்சி தேர்தல்களை நடத்த வேண்டும், தேர்தல்கள் மூலம் மட்டுமே கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்பதுதான். கடந்த 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த பின்னர் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலகினார். சோனியா காந்தி இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார்.

Is Rahul Gandhi eroding Congress bastion

ஓராண்டு ஓடிய பின்னரும் புதிய தலைவர் வரவில்லை. உட்கட்சி தேர்தலும் நடக்கவில்லை. மகனின் மனம் மாறாதா, மனம் மாறிய திருந்திய மகனிடம் கட்சியின் தலைமை பொறுப்பை கொடுத்து விட்டு விலக தாயார் காத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இது இளவு காத்த கிளியின் காத்திருப்பா என்று தெரியவில்லை. ஆனால் மகன் மனம் மாறுவதாக தெரியவில்லை. தாயாரும் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

23 பேரின் கடிதத்துக்கு பின்னர் தான் பதவி விலகுவதாக சோனியா அறிவித்தார். ஆனால் இது வழக்கமான நாடகமாகவே முடிந்தது. ஜால்ராக்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடக்கும் வரையில் தலைவராக இருக்க சோனியா காந்தி ஒப்புக் கொண்டார்.

இந்த 23 தலைவர்களின் டார்கெட், குறி சோனியா காந்தி இல்லை …ராகுல் காந்திதான் என்றே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.

காரணம் ராகுல் காந்தி பதவியிலிருந்து விலகினாலும் கடந்த ஓராண்டாகவே பின்பக்க கதவுகளின் வழியாக கட்சியில் எல்லா விஷயங்களையும் கட்டுப் படுத்திக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர் காங்கிரஸ் உள் விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள். ”பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல் அதிகாரத்தை சுவைத்துக் கொண்டிருக்க ராகுல் காந்தி விரும்புகிறார். அதுதான் சிக்கலுக்கான முக்கியமான காரணமே” என்கிறார் இந்த 23 தலைவர்களில் ஒருவர்.

இந்த 23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, கபில் சிபல், வீரப்ப மொய்லி, முகுல் வாஸ்னிக், மணிஷ் திவாரி, பிருத்திவிராஜ் சவஹான் போன்றோர் இடம் பெற்றிருப்பது பலரது புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது. “குலாம் நபி ஆசாத் சோனியா குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர். கபில் சிபல் சோனியா மற்றும் ராகுல் காந்தியை பல வழக்குகளில் இருந்து சிறைக்குப் போகாமல் காப்பாற்றியவர், இன்னமும் காப்பாற்றிக் கொண்டிருப்பவர். இவர்களை பாஜக கைக்கூலிகள் என்றெல்லாம் ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் சொல்லுவது அட்டூழியமானது” என்கிறார் இந்த 23 தலைவர்கள் பட்டியலில் இல்லாத ஒரு காங்கிரஸ் பிரமுகர்.

கடிதம் எழுதிய தலைவர்கள் அனைவருக்கும் தாங்கள் குறிவைக்கப்பட்டு விட்டோம் என்பது நன்றாகவே தெரிந்திருக்கிறது. என்னதான் சோனியா காந்தி மறப்போம், மன்னிப்போம் என்றே சொன்னாலும், நிச்சயம் தாங்கள் கட்டம் கட்டப் பட்டு விட்டோம் என்பதை இவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது. இதனை நிருபிப்பது போல இருக்கிறது கட்சியில் சமீபத்தில் சோனியா காந்தி செய்த சில மாற்றங்கள். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுவில் சோனியா காந்தி செய்த மாற்றங்களில், குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா போன்றவர்களை தவிர மற்ற 'கலகக் கார ர்களுக்கு இடம் கொடுக்கப்பட வில்லை. மாறாக சோனியாவின் விஸ்வாசிகளுக்கு போதிய இடம் கொடுக்கப் பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் 135 ஆண்டுகால வரலாற்றை பார்த்தால் ஒவ்வோர் 20 ஆண்டுகளுக்கும் ஒரு முறை அது பிளவு பட்டு வந்திருப்பது நன்றாகவே தெரிகிறது என்றே வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1969 ல் பிரதமர் இந்திரா காந்தியை எதிர்த்து நிஜலிங்கப்பா, காமராஜர் போன்ற தலைவர்கள் வெளியேறினர். 1989ல் வி.பி. சிங் வெளியேறினார். பத்தாண்டு இடைவெளியில் 1999 ல் ஷரத்பவார் வெளியே போனார். தற்போது 21 ஆண்டு காலத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு பிளவை காங்கிரஸ் சந்திக்கப் போகிறது என்றே தெரிகிறது.

கடந்த கால பிளவுகளின் போது இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி போன்றார் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இருந்து ’கலக காரர் களை சந்தித்தனர். போர்க்களத்தில் அவர்கள் இருந்தனர். ஆனால் இந்த முறை ’கலகக்கார ர்கள்’ எதிர்ப்பது போர்க்களத்தில் இல்லாத ஒரு தளபதியை. அவர்தான் ராகுல் காந்தி ….. ராகுல் காந்தி ஒரு வித்தியாசமான தலைவர்தான். போர்களத்தில் நேரடியாக இல்லாமல் எதிரிகளுடன் சமர் செய்து கொண்டிருக்கிறார். மகனின் அரசியல் எதிர்காலத்துக்காக தலைமை பொறுப்பை கையில் வைத்துக் கொண்டிருக்கிறார் தாயார். குடும்ப அரசியலின் கோர தாண்டவங்களில் இதுவும் ஒன்று என்றே கூற வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி படு குழியில் தள்ளிக் கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது… இந்திய அரசியல் இன்று இருக்கும் சூழலில் இது மிகவும் மென்மையான வார்த்தை என்றே சொல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+