3 சம்பவம்.. ஆளுநர் போகும் இடமெல்லாம் கேட் போட்ட திமுக.. "அவரையே" சந்தித்த ஸ்டாலின்.. அப்போ அதுதானா?
சென்னை: ஆளுநர் ரவி ஊட்டியில் இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் முக்கியமான சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
ஆளுநர் ரவி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஊட்டி சென்றார். ஊட்டியில் மாநாடு முடிந்த நிலையில் இன்னும் 5 நாட்கள் அங்கேயே தங்கி பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளார். அவரின் இந்த பயணம் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதலை பெரிதாக்கி உள்ளது.
இந்த நிலையில்தான் சமீபத்தில் நடந்த 3 சம்பவங்கள் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அது என்னென்ன சம்பவங்கள் என்று முதலில் பார்க்கலாம்!

சம்பவம் 1
சமீபத்தில் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தி மண்டபத்தில் ஆளுநர் ரவி முன் வழிபாடு நடத்தினார். தனக்கு நெருக்கமான சிலருடன் சென்று அவர் அங்கு வழிபாடு நடத்தினார். ஆனால் அவர் வழிபாடு நடத்தி 5 நாட்களில் அயோத்தி மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றது. இதற்காக அங்கு பெரிய போராட்டமே நடந்தது. அதிகாரிகள் திடீரென மண்டபத்திற்கு சென்று, அதை கைப்பற்ற முயன்றனர். இதற்கு எதிராக பாஜகவினர் கடுமையாக போராட்டம் செய்ய அந்த பகுதியே பரப்பானது.

நீதிபதி உத்தரவு இருந்தாலும்
அயோத்திமண்டபத்தை கடந்த 2013ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, ஸ்ரீ ராம் சமாஜம் அமைப்பு சார்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் கடந்த வாரம் தனி நீதிபதி வி.எம். வேலுமணி, அறநிலையத்துறை இந்த இடத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என்று உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்றினாலும் சரியாக ஆளுநர் ரவி சென்று வந்த ஒரே வாரத்தில் திமுக இப்படி செய்தது பல கேள்விகளை எழுப்பியது.

சம்பவம் 2
இதனால் எங்கே ஆளுநரை அரசு தரப்பு நோட்டமிடுகிறதோ என்ற கேள்வி எழுந்தது, இதை உறுதி செய்யும் வகையில் ஆளுநர் ரவியின் ஊட்டி பயணத்தையும் அரசு கவனித்தது. சரியாக ஆளுனர் ஊட்டியில் துணை வேந்தர் மாநாடு நடத்தும் அதே சமயத்தில் தமிழ்நாடு அரசு அவருக்கு எதிராக முக்கிய மசோதா ஒன்றை நிறைவேற்றியது. துணை வேந்தர்களை ஆளுநர் நியமிக்கும் அதிகாரத்தை பறித்து அரசே நியமிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் பயணத்தை குறி வைத்து அரசு சார்பாக இந்த பதிலடி கொடுக்கப்பட்டது.

சம்பவம் 3
இப்போது முத்தாய்ப்பாக 3வது சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு கடந்த 19ம் தேதி ஆளுநர் ரவி சென்றார். தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து விழா எடுக்கப்படும். இந்த விழாவிற்கான ஞானரத்தை துவங்கி வைத்த ஆளுனர் ரவி, அங்கு குரு மகா சந்நிதானத்தை சந்தித்து பேசினார். ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமியுடன் நீண்ட நேரம் ஆளுநர் ரவி பேசினார்.

மீண்டும் நடந்தது
இந்த நிலையில்தான் தற்போது தருமபுரம் ஆதீனத்தை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். தலைமை செயலகம் வந்த தருமபுரம் ஆதீனம் முதல்வர் ஸ்டாலினுடன் சில நிமிடங்கள் பேசினார். ஆளுநர் உடன் சந்திப்பு நடத்தி 8 நாட்களில் அவர் முதல்வரை வந்து பார்த்துள்ளார். தருமபுரம் ஆதீனம், காஞ்சிபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், குன்றக்குடி அடிகளார், சூரியநாராயண ஆதீனம் உள்ளிட்ட 11 ஆதீனங்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

நெருக்கடி கொடுக்க திட்டம்
அறநிலையத்துறை மானியக்கோரிக்கை தொடர்பாக விவாதிக்க இந்த சந்திப்பு நடத்தப்பட்டது என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும் சரியாக ஆளுநரை தருமபுரம் ஆதீனம் சந்தித்த ஒரு வாரத்தில் இந்த சந்திப்பு நடப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் செல்லும் இடங்களை எல்லாம் கண்காணித்து அரசு தரப்பு இது போன்ற மூவ்களை மேற்கொள்கிறதோ என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications