முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தனியாருக்கு கொடுக்கப்படுகிறதா? சென்னை மாநகராட்சி விளக்கம்
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 358 பள்ளிகளில் செயல்பாட்டில் இருக்கும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதுபற்றி சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
காலை உணவுத் திட்டம் : மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும், ஊட்டச்சத்து நிலையை உயர்த்த வேண்டும், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரிக்க வேண்டும், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய குறிக்கோளாக கொண்டு தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையை பொறுத்தவரை காலை உணவு திட்டம் சென்னை மாநகராட்சியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையுள்ள 358 அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள அரசுப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு விட மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பததாக செய்திகள் வெளியாகின.
சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், சென்னையில் பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்குத் தனியாருக்கு ஒப்பந்தம் செய்து விடுவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
பாஜக தேசிய மகளிரணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவான் இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 358 பள்ளிகளில் செயல்பாட்டில் இருக்கும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது ஏன் ? கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும், ஏழை எளிய மாணவர்களுக்கு காலை உணவை இலவசமாக வழங்க 2019-ல் அப்போதைய ஆளுநர் திட்டமிட்டார்.
இதற்காக, 'அட்சய பாத்திரம்' என்ற தொண்டு நிறுவனத்திற்கு, சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் வழங்கியது. இதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த, 5 கோடி ரூபாய் ஆளுநரால் ஒதுக்கப்பட்டது. ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை நடத்தி வருகின்ற இஸ்கான் என்ற அமைப்பு அட்சய பாத்திரம் என்ற பெயரில் அரசு பள்ளிகளுக்கு காலை உணவு திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தினை அரசியலாக்கி அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை அரசே நடத்தும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதை நினைவு படுத்தவிரும்புகிறேன். அரசே நடத்திய இந்த திட்டத்தை தனியாருக்கு கொடுத்து செயல்படுத்தச் சொல்வதான் காரணம் என்னவோ? இதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளக்கமளிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் 5 கோடி ரூபாய் செலவில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை தற்போது 19 கோடி ரூபாய்க்கு தனியாருக்கு தாரை வார்ப்பது எதற்காக? தற்போது சென்னை மாநகரில் மட்டும் காலடி வைத்து இருக்கும் இந்த திட்டம் நாளை தமிழகம் முழுவதும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. வரும் நாட்களில் தனியாருக்கே சத்துணவு திட்டத்தையும் தாரைவார்க்கமாட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது." இவ்வாறு வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த சூழலில், காலை உணவு திட்டம் தொடர்பாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது . அந்த விளக்கத்தில், "சென்னையில் 65,030 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 35 சமையல் கூடங்களில் இருந்து தரமாக காலை உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் உள்ள உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் இத்திட்டம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கும் நிலை ஏற்பட்டால், அதை தரமாக தயாரித்து வழங்க உத்தேச மதிப்பீடு தயாரித்து மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ஒப்பந்தப்புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. சென்னை மாநகராட்சியில் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications