எடப்பாடி - விஜய் சந்திப்பு உண்மையா? தவெக உதிரி கட்சியா? அதிமுகவுக்குள் சலசலப்பு ஏன்?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் விஜய்க்குமான சந்திப்பு நடைபெற்றது என்பது உண்மைதான் என்றும் அதை ஏன் இப்போது தவெக மறுக்கிறது என்பது பற்றியும் மூத்த பத்திரிகையாளர் பிரியன் விளக்கம் அளித்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீரென்று அதிமுகவுடனான கூட்டணி என்பது ஆதாரமற்ற செய்தி என அறிக்கைவிட்ட பிறகுதான் அரசியல் வட்டாரத்தில் அந்தச் செய்தி அதிக கவனம் பெற்றுள்ளது. பலரும் ஏன் இப்போது வலிய வந்து இந்த மறுப்பை வெளியிட வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், 'இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது நல்லதுதான்' என்று ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.

ஆனால், இந்த அறிக்கைக்குப் பின்னால் தவெகவின் மற்றொரு அரசியல் வியூகம் ஒளிந்துள்ளது என்கிறார்கள். அதாவது தவெக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தொண்டர்கள் நம்பிக்கையோடு காத்துள்ளனர். அப்படி இருக்கும் போது வெறும் 60 தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு அதிமுகவுடன் கூட்டணிக்குச் சென்றால், மீதமுள்ள தொகுதிகளில் உள்ள தவெக தொண்டர்கள் தங்களுக்குச் சீட்டு கிடைக்கப் போவதில்லை என்று சோர்ந்து போய் கட்சிப் பணியில் அதிக ஈடுபாடு இல்லாமல் போய் விடுவார்கள்.
2026 தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் உள்ளது. இப்போதே அதிமுக உடன் கூட்டணி என ஒரு தகவலை ஊடகங்கள் உறுதி செய்துவிட்டால், விஜய்யின் ஊழல் எதிர்ப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். அவர் அதிமுக பக்கம் சேர்வதற்கு ஒரு தனிக் கட்சி தேவையா? இதுதான் மாற்றமா? என திமுக உட்படப் பலரும் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். அது கட்சியின் செல்வாக்கைப் பாதிக்கும். அதை மனதில் கொண்டுதான் இந்த மறுப்பறிக்கை உடனடியாக வெளியிடப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு விஜய்யுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளதாக தெரிகிறது. திமுகவின் மெகா கூட்டணிக்கு எதிராக அதிமுக அணியில் விஜய் இடம்பெற்றால் அது மக்களிடம் ஒரு செல்வாக்கையும் நம்பிக்கையும் ஏற்படுத்தும் என அவர் நம்புகிறார் என்கிறார் பத்திரிகையாளர் பிரியன். இவர்தான் அதிமுகவுடன் விஜய் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக முதன்முதலாகப் பொதுவெளியில் போட்டு உடைத்தவர்.

விஜய் இன்னும் ஒரு வருடம் வரை தனது கட்சியை தனிப்பட்ட முறையில் வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். போராட்டம் நடத்துவது, திமுகவுக்கு எதிரான ஊழல் பட்டியலைத் தயாரித்து ஆளுநரைச் சந்திப்பது எனப் பல திட்டங்களை அண்ணாமலையைப் போலவே விஜய்யும் செய்ய இருக்கிறார். அதனால் எந்தளவுக்குக் கட்சி செல்வாக்கு கூடும் என்பதை அவர் கணித்து விட்டு, இறுதிக் கட்டத்தில் கூட்டணி வைத்தால்தான் வெற்றிவாய்ப்பு என ஒரு நிலை உருவானால் அப்போது ஒரு புதிய முடிவை எடுப்பார் என்றும் பிரியன் சொல்கிறார்.
அதேபோல் விஜய் மற்றும் எடப்பாடிக்கு இடையே நடந்த சந்திப்பு நடந்தது உண்மைதான். அதில் மறுபேச்சுக்கு இடமே இல்லை என்கிறார் பிரியன்.
விஜய் தனது கட்சி உறுப்பினர்களை எந்தளவுக்குப் பலப்படுத்த முடியுமோ அதை முதலில் செய்யார். அடுத்து பூத் கமிட்டிக்கு உரிய நிர்வாகிகளை எந்தளவு நியமிக்க முடியும் என்பதையும் செய்து பார்ப்பார். அவரால் 50 சீட்டுகள் வரை பெற முடியாது என்பதை உணரும் வரை தனி ஆவர்த்தனம் செய்து பார்ப்பார். தேர்தல் நெருக்கத்தில் அவர் மட்டுமே விஜயகாந்த் போல வெற்றிபெற முடியும் என நிலையை உணர்ந்தால் அதிமுக அணிக்குத் தாவி விடுவார் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் தனித்து அவரால் பெரிய வெற்றியைப் பார்க்க முடியாது. அதை உணர்ந்துதான் திருமாவளவன் பின் வாங்கிவிட்டார். எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை 2026 என்பது முக்கியமான தேர்தல். அதைத்தான் திண்டுக்கல் சீனிவாசன், 'கூட்டணி பற்றி நீங்கள் எதையும் பொதுவெளியில் பேசக் கூடாது என்று எடப்பாடி உத்தரவு போட்டுள்ளார்' என்று வெளிப்படையாகப் போட்டு உடைத்துள்ளார்.
கே.பி. முனுசாமி, "நாம் உஷாராக இல்லை என்றால் உதிரி கட்சிகள் மேலே வருவதற்கு வாய்ப்பு வந்துவிடும்" என்று நிர்வாகிகள் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசி இருக்கிறார். அவர் உதிரி கட்சி என்பது விஜய்யைத்தான் என்பதைத் தனியே சொல்ல தேவையில்லை. ஆக, அதிமுகவையும் தன் ஆதரவாளர்களையும் தக்கவைக்க வேண்டிய மிகப்பெரிய அழுத்தம் எடப்பாடி அணிக்கு இருக்கிறது. அதை மனதில் வைத்து கடைசி நேரத்தில் அவர் கூட்டணி ஆட்சி பற்றி கூட ஒரு அறிவிப்பை வெளியிட்டு திமுக கூட்டணிக்குள் ஒரு சலசலப்பை உண்டாக்கலாம் என்கிறார்கள் அரசியல் பல்ஸ் புரிந்த சிலர்.












Click it and Unblock the Notifications