குரூப் 2 மெயின் தேர்வு ரத்தா? தேர்வர்கள் மீது நடவடிக்கையா? குளறுபடி பற்றி டிஎன்பிஎஸ்சி பரபர ஆலோசனை
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுக்கான மெயின் தேர்வு கடந்த 25ம் தேதி தமிழ்நாட்டில் நடந்தபோது குளறுபடி ஏற்பட்டது.
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ மெயின்ஸ் தேர்வு(முதன்மை தேர்வு) கடந்த 25ம் தேதி நடந்தது. பல மையங்களில் வினாத்தாள்களின் பதிவெண்கள் மாறியிருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து வினாத்தாள்கள் திரும்ப பெறப்பட்டன. இந்த வேளையில் வினாக்களை தேர்வர்கள் பார்த்த நிலையில் அதுதொடர்பான விடைகளை செல்போன் மற்றும் புத்தகங்களில் படித்து சில மையங்களில் தேர்வர்கள் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதனால் இந்த குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தான் சென்னையில் டிஎன்பிஎஸ் அதிகாரிகள் இன்று அவரசமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு துறைகளுக்கு தேவையான ஆட்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு அறிவிக்கப்பட்டது.
அதன்படி 2022 மே 21ல் முதல் நிலை தேர்வு நடந்தது. நவம்பர் 8ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் 55,071 பட்டதாரிகள் பாஸ் செய்ததாக அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான மெயின்ஸ் தேர்வு (முதன்மை தேர்வு) நேற்று முன்தினம் நடந்தது.

குரூப் 2 தேர்வில் குளறுபடி
மாநிலம் முழுவதும் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் மெயின்ஸ் தேர்வு எழுதினர். அன்றைய தினம் காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், மதியம் பொதுத் தேர்வும் நடத்தப்பட்டது. இதில் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வில் குழப்பம் ஏற்பட்டது. அதாவது காலை 9.30 மணிக்கு தேர்வு துவங்கி 12.30 மணி வரை நடைபெற்ற நிலையில் சில தேர்வு மையங்களில் வினாத்தாளில் உள்ள பதிவெண்கள் மாறி மாறி இருந்துள்ளன. இது குழப்பத்தை ஏற்படுத்தியது.

திரும்ப பெறப்பட்ட வினாத்தாள்கள்
இதையடுத்து வினாத்தாள்கள் திரும்ப பெறப்பட்டன. அதன்பிறகு குளறுபடி சரிசெய்யப்பட்டு தேர்வுகள் மீண்டும் நடந்தது. ஏற்பட்ட காலதாமதத்துக்காக நேர நீட்டிப்புடன் தேர்வர்கள் தேர்வு எழுதினர். இருப்பினும் கூட சில மையங்களில் உள்ள தேர்வர்கள் வினாத்தாளில் உள்ள கேள்விகளை பார்த்த பிறகு அதற்கான விடைகளை தங்களின் செல்போன், புத்தகங்களில் படித்து தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. அதாவது குளறுபடியை சரிசெய்யும் சமயத்தில் இதனை சில தேர்வர்கள் செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

ரத்து செய்ய கோரிக்கை
இதனால் இந்த குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாற்று தேதியில் தேர்வு நடத்த வேண்டும் என அனைவரும் கோரிக்கைகள் வைத்துள்ளனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆலோசனை
இந்நிலையில் தான் இன்று சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் உள்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் குரூப் 2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடி குறித்து முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குரூப் 2 தேர்வை ரத்து செய்ய எழுந்துள்ள கோரிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்ட நிலையில் தேர்வில் விதிகளை மீறிய தேர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டடுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முடிவு என்ன?
இருப்பினும் இந்த கூட்டத்தில் எந்த மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டது? என்பது பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் இந்த விஷயத்தில் டிஎன்பிஎஸ்சி மேற்கொள்ள உள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக இன்று அல்லது இன்னும் சில நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications