இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக்
சென்னை: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூரில், 2 புதிய வகை பாம்பு இனங்கள் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளன. இயற்கை பிரியர்களுக்கும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்தத் தகவல் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.. இதுதான் இன்று ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.
புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த 2 புதிய பாம்புகளும் கீல்பேக் (Keelback) எனப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவையாம்.. பொதுவாக இந்த வகை பாம்புகள் நீர்நிலைகளுக்கு அருகிலும், அதிக ஈரப்பதம் கொண்ட அடர்ந்த வனப்பகுதிகளிலும் வசிக்கக்கூடியவை.

இவைகளின் உடல் அமைப்பு மற்றும் செதில்களின் வரிசை மற்ற பாம்புகளிலிருந்து மாறுபட்டிருப்பதை கவனித்த ஆராய்ச்சியாளர்கள், மரபணு சோதனைகள் மூலம் இவை இதுவரை உலகிற்குத் தெரியாத புதிய இனங்கள் என்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்தியா சாதனை
அதேபோல அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பிற்கு ஹெபியஸ் லாக்டியா (Hebius lactea) என்று பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல், மணிப்பூரில் கண்டறியப்பட்ட மற்றொன்றுக்கு ஹெபியஸ் வெனூஸ்டஸ் (Hebius venustus) என்று பெயரிட்டுள்ளனர். இந்த பெயர்கள் அந்தப் பாம்புகளின் தனித்துவமான நிறம் மற்றும் உடல் அமைப்பைக் குறிக்கும் வகையில் சூட்டப்பட்டுள்ளன.
இந்த கீல்பேக் பாம்புகளின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா, அவற்றின் முதுகில் உள்ள செதில்கள் சற்று மேடாக, அதாவது படகின் அடிப்பகுதி போன்ற அமைப்பில் இருக்கும். அதனால்தான் இதற்கு கீல்பேக் என்று பெயர் வந்ததாம்.. இவை பெரும்பாலும் நச்சுத்தன்மை கிடையாது.. மனிதர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத மிகக் குறைந்த நச்சுத்தன்மை கொண்டவை. காடுகளில் உள்ள சிறிய தவளைகள் மற்றும் மீன்களை இவை உணவாக உட்கொள்கின்றன.
பாம்புகள் கண்டுபிடிப்பு
வடகிழக்கு இந்தியா என்பது எப்போதும் அரிய வகை உயிரினங்களின் புகலிடமாக இருந்து வருகிறது. ஏற்கனவே அங்கு பல புதிய வகை மீன்கள் மற்றும் தவளைகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இப்போது இந்தப் புதிய பாம்புகளின் வரவு அந்தப் பகுதியின் இயற்கை வளத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. காடுகள் அழிக்கப்படுவது மற்றும் காலநிலை மாற்றம் போன்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், இன்னும் கண்டறியப்படாத பல உயிரினங்கள் நம்முடைய காடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு இதுவே சாட்சி.
இந்த கண்டுபிடிப்பு ஜஸ்ட் ஒரு தகவல் மட்டுமல்ல, நமது நாட்டின் இயற்கை சமநிலையை புரிந்துகொள்வதற்கான ஒரு வழியாகும். வனப்பகுதிகளை நாம் எந்த அளவிற்குப் பாதுகாக்க வேண்டும் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. ஆராய்ச்சியாளர்களின் இந்த விடாமுயற்சியால், இந்தியாவின் உயிரியல் வரைபடத்தில் 2 புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளது மகிழ்ச்சியான விஷயம்தானே??!!!












Click it and Unblock the Notifications