விழிபிதுங்க வைத்த விலைவாசி.. ரேஷனில் வரும் அதிரடி மாற்றம்.. மக்களை மயக்கும் "மளிகை பேக்கேஜ்"
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் சமயங்களில் கொடுப்பது போல இந்த முறை மளிகை பேக்கேஜ் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
எல்லா வருடமும் பொங்கல் சமயத்தில் அரசு சார்பாக சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படியே கடந்த வருடமும் பொங்கலுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு பொருட்கள் கடந்த வருடம் வழங்கப்பட்டது. அதோடு வழங்கப்படாத மற்ற பொருட்களுக்காக 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. கரும்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரும்பு விநியோகம் செய்யப்படவில்லை. 1000 ரூபாய் பணம் வழங்கப்படுவது மக்கள் இடையே வரவேற்பை பெற்றது.
மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது விலை ஏற்றத்திற்கு இடையில் இதேபோன்ற மளிகை பேக்கேஜ் வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படியே தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் சமயங்களில் கொடுப்பது போல இந்த முறை மளிகை பேக்கேஜ் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மிளகாய் தூள், தக்காளி, வெங்காயம், டீ தூள், பருப்பு வகைகள் என்று அனைத்தின் விலையும் அதிகரித்து உள்ளதால் எல்லா பொருட்களும் அடங்கிய பேக்கேஜ் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கிய தக்காளியின் விலை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ₹100ஐ எட்டியது.
ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்தது. அதுவே தற்போது வேகமாக உயர்ந்து ஒரு கிலோவுக்கு ₹100 என்ற விலையில், தக்காளியின் விலை இப்போது சந்தையில் விற்கப்படுகிறது. கலர் பெல் பெப்பர்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற வெளிநாட்டு காய்கறிகளை விட தக்காளி விலை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்விற்கு இடையில் தற்போது துவரம் பருப்பின் விலையும் உயர்ந்து உள்ளது. தக்காளி இல்லாமல் கூட தமிழ்நாட்டில் குடும்பம் நடத்திவிடலாம். ஆனால் துவரம் பருப்பு மிகவும் அவசியம். அதிலும் சைவம் சாப்பிடுபவர்களுக்கு துவரம் பருப்பு மிக முக்கிய புரத சத்து கொடுக்கும் பொருள்.
அதன் விலையும் உயர்ந்துள்ளது. துவரம் பருப்பின் விலை ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.170 வரை விற்பனையாகிறது. கடந்த வாரம் 70-90 ரூபாய்க்கு விற்ற பருப்பு தற்போது 50-60 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. அண்டை மாநிலங்களில் விளைச்சல் கம்மியாக இருப்பதால் பருப்பு விலை உட்பட மளிகை பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. இந்த நிலையில்தான் ஏற்கனவே ரேஷனில் வழங்கப்படும் தக்காளி, துவரம் பருப்புடன் சேர்த்து மற்ற மளிகை பொருட்கள் ரேஷனில் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications