சரிதாவை சாதி ரீதியாக மிரட்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் - முக ஸ்டாலின்
சென்னை: ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சரிதா சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டு கொலை மிரட்டலுக்கு ஆளாகி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். சரிதாவுக்கு பாதுகாப்பு தந்து அவரை மிரட்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டம் ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா, பட்டியலினத்தைச் சேர்ந்தவரான சரிதா, சாதி பாகுபாட்டுக்கு உள்ளாவதாகவும், கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அலுவலகத்தில் உட்கார விடாமல் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் மிரட்டுவதாக புகார் அளித்திருக்கும் சரிதா, ஊராட்சி எல்லையில் உள்ள தகவல் பலகை, ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் ஊராட்சி தலைவர் சரிதா என்ற பெயரை எழுதவிடாமல் தடுக்கிறார்கள் எனவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
கோவை: தலித் என்பதால் அலுவலகத்தில் பெயரை எழுதவிடாமல் தடுக்கிறார்கள்-பெண் ஊராட்சி தலைவர் பகீர் புகார்
இதனையடுத்து அதே ஊரை சேர்ந்த பாலசுப்ரமணியம் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் நெகமம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எஸ்.சி எஸ் டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
கோவை, ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சரிதா சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டு, கொலை மிரட்டலுக்கு ஆளாகி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லையா?. சரிதாவுக்கு பாதுகாப்பு தந்து, மிரட்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.