ஏன்டா டேய்.. இதுவா என் அடையாளம்? மேடையிலேயே ஆதார் கார்டை தூக்கி வீசிய சீமான்!
சென்னை: எனது ஆதார் எனது அடையாளமாம்.. என் மொழியே இல்லாத ஆதார் அட்டை என் அடையாளமா என ஆவேசமாக பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தமிழ் மொழியை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பகவத் சிங் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இன்று 7வது நாளாக உண்ணவிரத போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், போராட்டம் நடக்கும் இடத்துக்கு நேரில் சென்று, வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி போராடும் வழக்கறிஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து மேடையில் பேசிய சீமான், "நான் தமிழன். அதுதான் என் அடையாளம். என் முகம் சிதைந்து இறந்து கிடந்தால் என் முகத்தை உன்னால் அடையாளம் காட்ட முடியாது. அப்படி மொழி சிதைந்து அழிந்தால் உன் இனத்தை அடையாளம் காட்ட முடியாது.
இமயம் வரை பரவியிருந்த நீ, காலடிகள் குறுக காரணம், மொழிச் சிதைவு, மொழி அழிவு. 1800 ஆண்டுக்கு முன்பு ஏது கன்னடம்? 1600க்கு முன்புக்கு ஏது தெலுங்கு? 15ஆம் நூற்றாண்டுக்கு முன்பு மலையாளம் என்ற மொழியே இல்லை. எல்லாம் தொலைந்து, இன்று மூத்த மொழி தமிழை தொலைக்கப் பார்க்கிறார்கள்." என்றார்.
மேலும், கூட்டத்தில் இருந்த ஒருவரின் ஆதார் அட்டை ஜெராக்ஸை வாங்கிய சீமான், "இந்தியா நமக்கு கொடுக்கும் அடையாளத்தை பாருங்கள். ஆதார் அட்டையில் முதலின் என் பெயர் இந்தியில் உள்ளது. இரண்டாவதாக ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறது. என் தாய்மொழியே இதில் இல்லை, இது எனது அடையாளமா? டேய், என் அடையாளம் தமிழ் தான். இதுவா என் அடையாளம்?" என ஆவேசமாகப் பேசி, அந்த ஆதார் அட்டை காப்பியை வீசி எறிந்தார் சீமான்.












Click it and Unblock the Notifications