முரண்டு பிடிக்கும் ஆளுநர்.. அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் ஸ்டாலின்.. அரசாணை வெளியிட பிளான்?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த 2 இலாகாக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்றி வழங்குவது தொடர்பான பரிந்துரை கடிதத்தை ஆளுநர் ரவி இதுவரை ஏற்காத நிலையில், இலாகா மாற்றம் தொடர்பாக தமிழ்நாடு அரசே அரசாணையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பொறுப்பில் இருந்த இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துச்சாமி ஆகியோருக்கு மாற்றி தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த நிலையில், அதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்து திருப்பியனுப்பினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவக் காரணங்களால் இலாகாக்களை மாறுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தக் காரணம் தவறானது, அவரை கைது செய்திருக்கிறார்கள், அதனை குறிப்பிடாததால் இந்த பரிந்துரையை ஏற்க இயலாது என ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர், மீண்டும் இலாகா மாற்றம் பற்றிய பரிந்துரை கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளது தமிழ்நாடு அரசு. இதனை ஆளுநர் ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த தகவலும் வரவில்லை எனத் தெரிகிறது.
கடந்த மே 31ஆம் தேதியே அமைச்சர் செந்தில் பாலாஜியை கேபினட்டில் இருந்து நீக்குமாறு ஆளுநர் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியதற்கு, வழக்கு நிலுவையில் இருப்பதாலேயே அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை என பதில் அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின். இந்த விஷயமும், ஆளுநர் ரவி தற்போது முரண்டு பிடிக்க காரணம் எனக் கூறப்படுகிறது.
அமைச்சரவையில் யார் யார் இருக்க வேண்டும், யாருக்கு என்ன இலாகா என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது ஆளுநர் அல்ல, அது முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம், ஆளுநருக்கு தெரிவிப்பது தனது கடமை என்பதால் அவருக்கு கடிதம் அனுப்பினார் என திமுக தரப்பு கூறியுள்ளது.
இதையடுத்து, இலாகா மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் இதுவரை ஏற்காத நிலையில், இலாகா மாற்றத்தை அரசாணையாக வெளியிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருக்கும் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை என இரண்டு இலாக்காக்களும் மற்ற அமைச்சர்களிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட உள்ளது.
மின்சாரத்துறையை நிதி அமைச்சராக இருந்து வரும் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் முத்துசாமி வசமும் கூடுதலாக ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்த அறிவிப்பை விரைவில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் இறையன்பு அரசாணையாக வெளியிடுவார் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன.
அதேசமயம், அப்படி அரசாணை வெளியிட்டால் ஆளுநர் உடனான மோதல் போக்கு இன்னும் தீவிரமடையும் என்பதால், தமிழ்நாடு அரசு அதை தவிர்க்கவே எண்ணும், இலாகா மாற்ற பரிந்துரையை ஏற்க ஆளுநருக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கவே முயலும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications