தலைவர் என்று நான் எதற்கு இருக்கேன்? அதிமுக மீதான அண்ணாமலையின் கோபத்துக்கு இதுதான் காரணமா?
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அதிமுகவுக்கு பதில் கவுண்ட்டர் கொடுக்க பாஜக முக்கிய பிரமுகர்கள் யாரும் முன்வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, குஷ்பு, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட யாரும் பத்திரிகையாளர்களின் அலைபேசி அழைப்புகளையே எடுக்கவில்லை.

சரி விஷயத்திற்கு வருவோம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கூட்டணி தொடர்பாக கடந்த 6 மாதங்களில் மட்டும் 2 முறை டெல்லியில் சந்தித்து பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த 2 முறையும் இது குறித்த தகவலை ஒரு சம்பிரதாயத்துக்காவது பாஜக மாநிலத் தலைவர் என்ற முறையில் அண்ணாமலையிடம் அதிமுக தரப்பில் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பொதுவாக இது போன்ற நிகழ்வுகளுக்கு தேசியக் கட்சியின் மாநில தலைமை மூலம் தான் அப்பாயிண்ட்மெண்ட் கேட்க்கப்படும். ஆனால் அண்ணாமலையை அதிமுக ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
இதனால் தான் கடந்த மார்ச் மாதம் இதேபோல் ஒரு புயலை கிளப்பினார் அண்ணாமலை. திராவிடக் கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து பாஜக தேர்தலை சந்திக்கவில்லை எனப் பேசி அண்ணாமலை பரபரப்பை உண்டாக்கினார். அப்போதும் இதே போல் வார்த்தைப் போர் வெடித்தது. இன்னும் சொல்லப்போனால் எடப்பாடியின் படத்தை தீ வைத்து எரிக்கும் அளவுக்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் இறங்கினார்.
டெல்லி பாஜக தேசியத் தலைமை தான் இதில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து சுமூகமாக செல்ல அறிவுறுத்தியது. இப்போதும் அதேபோல் மீண்டும் ஒரு பிரச்சனை வெடித்திருக்கிறது.
தன்னை புறக்கணித்து டெல்லியில் உள்ள வேறு சோர்ஸ்கள் மூலம் பாஜக தேசியத் தலைமையை அதிமுக அணுகுவது அண்ணாமலைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தன்னை பைபாஸ் செய்து பாஜக தேசியத் தலைமையை எடப்பாடி பழனிசாமி அணுகுவதை தனது தன்மான பிரச்சனையாக கருதியிருக்கிறார் அண்ணாமலை. இதன் வெளிப்பாடாக தான் எடப்பாடி பழனிசாமி மீதான தனது ஆத்திரத்தை பிரஸ்மீட் மூலம் நேற்றைய முன் தினம் வெளிப்படுத்தியிருக்கிறார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications