விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்!
சென்னை: தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக முக்கிய சக்தியாக இருந்து வந்த அதிமுக தற்போது மிகப்பெரிய சவாலான அரசியல் சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஒரு காலத்தில் ஆட்சியையும், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் மாறி மாறி கைப்பற்றிய அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி நகர்கிறார்கள் என்ற தகவல் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மிகுந்த சிக்கலில் இருக்கிறார் என்கின்றனர்.
எம்ஜிஆர் தொடங்கி ஜெயலலிதா கட்டியெழுப்பிய அதிமுக, தமிழகத்தின் இரண்டு பெரிய அரசியல் சக்திகளில் ஒன்றாக நீண்ட காலம் செயல்பட்டது. ஆனால் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அந்தக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்திகள், கோஷ்டிப் பூசல்கள் மற்றும் தலைமை தொடர்பான விவகாரங்கள் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

தேர்தலுக்கு முன்பே அதிமுகவும், தமிழக வெற்றிக் கழகமும் கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரவலாக இருந்தது. இரு தரப்பிலும் அதற்கான விருப்பம் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் எந்தக் கட்சியும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.
2026 தேர்தல்
இதனால் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அந்த முயற்சி இறுதி வரை வெற்றி பெறவில்லை. இதன் காரணமாக இரு கட்சிகளும் தனித்தனியாக களமிறங்கின. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அரசியல் களம் வேகமாக மாறியது. தவெக ஆட்சியைப் பிடித்த நிலையில், அதிமுகவுக்குள் எடப்பாடி மீதான அதிருப்தி வெளிப்படையாக பேசப்படத் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக சில எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தவெக கூட்டணியை நோக்கி நகர்ந்தனர்.
அதிமுக
குறிப்பாக, அதிமுகவில் இருந்த சில முக்கிய தலைவர்கள் தவெக தலைமையுடன் தொடர்பில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தவெகவில் இணைந்திருக்கும் நிலையில், மேலும் பலர் அந்தக் கட்சியை நோக்கி நகர தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆதவ் அர்ஜுனா
இந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துகள் இந்த விஷயத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுகவின் பல முக்கிய நிர்வாகிகள் அடுத்த சில மாதங்களில் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் கவலை உருவாகியுள்ளது. அதேசமயம், அதிமுகவை உடைப்பதற்காக திட்டமிட்ட நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், அரசியல் சூழ்நிலையால் அதிருப்தியடைந்தவர்கள் தாங்களாகவே புதிய அரசியல் வாய்ப்புகளை தேடி செல்கிறார்கள் என்றும் தவெக தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஏற்க மறுக்கின்றன.
ஜெயலலிதா
ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில், "அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது; அது ஒரு குடும்பம்" என்று பலமுறை கூறியிருந்தார். அந்த வார்த்தைகள் தற்போது மீண்டும் அரசியல் அரங்கில் பேசப்படுகின்றன. ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுக தனது பழைய வலிமையை தக்க வைத்துக் கொள்ளுமா? அல்லது புதிய தலைமுறையினரின் ஆதரவு தவெக பக்கம் செல்வதால் கட்சி மேலும் பலவீனமடையுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
எடப்பாடி பழனிசாமி
மறுபுறம், அதிமுக தலைமையும் இந்த சவால்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. கட்சியை மீண்டும் ஒருங்கிணைப்பது, மாவட்ட அளவிலான அமைப்புகளை பலப்படுத்துவது, தொண்டர்களை உற்சாகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் எடப்பாடி பழனிசாமி தீவிர கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2029 மக்களவைத் தேர்தல் ஆகியவை அதிமுகவின் உண்மையான பலத்தை சோதிக்கும் தேர்தல்களாக பார்க்கப்படுகின்றன.
தமிழக அரசியல்
அந்த தேர்தல்களில் கட்சி மீண்டும் எழுச்சி பெறுமா அல்லது தற்போது உருவாகி வரும் பிளவுகள் அதிமுகவின் வாக்கு வங்கியை மேலும் பாதிக்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தவெகவும், தனது அடையாளத்தையும் வாக்கு வங்கியையும் தக்கவைத்துக் கொள்ள போராடும் அதிமுகவும் இடையே நடைபெற்று வரும் இந்த அரசியல் இழுபறி, வரும் மாதங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஜெயலலிதா உருவாக்கிய அரசியல் கோட்டை தொடர்ந்து உறுதியாக நிற்குமா அல்லது ஒவ்வொரு செங்கலையும் உருவி தவெக அதனை பலவீனப்படுத்துமா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications