திமுகவிடம் கூட்டணி பேரத்தை தொடங்கிய விசிக? வந்து விழுந்த கேள்வி.. கவனம் பெற்ற திருமாவளவனின் பதில்
சென்னை: 2026 சட்டசபை தேர்தலையொட்டி திமுகவிடம் கூட்டணி பேரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கி விட்டதா? என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. தற்போது திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 4 எம்எல்ஏக்களும், 2 எம்பிக்களும் உள்ளன. இதில் எம்பிக்களில் திருமாவளவனும் ஒருவர்.

சமீபகாலமாக திருமாவளவன் திமுக மீது அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் பரவின. ஆனால் அதனை முற்றிலுமாக திருமாவளவன் மறுத்தார். தொடர்ந்து திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். எங்கள் கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது என்று கூறி வருகிறார்.
இப்படியான சூழலில் தான் வரும் 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டது. இன்னும் 13 மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை விரைவில் தொடங்க உள்ளன. இந்நிலையில் தான் திருமாவளவன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம்
பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
பத்திரிகையாளர் ஒருவர், ‛‛அதிமுகவின் ஜெயக்குமார் கூறும்போது வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி உடையும் என சொல்கிறார். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு திருமாவளவன், ‛‛அது அவரது (ஜெயக்குமார்) எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாது என்பது அவருக்கே தெரியும்'' என்றார்.
இதையடுத்து இன்னொரு பத்திரிகையாளர், ‛‛4 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் இருந்தாலும் கொடி கூட ஏற்ற முடியவில்லை என்று சொல்கிறீர்கள்? திமுக கூட்டணியில் உள்ள உங்கள் கட்சிக்கே இந்த நிலை என்றால் மற்ற கட்சிகளின் நிலை என்னவாக இருக்கும்?'' என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு திருமாவளவன், ‛‛மற்ற கட்சிகளின் நிலை எங்களுக்கு தெரியாது. ஆனால் எங்களின் நிலையை நாங்கள் சொல்கிறோம். அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்கிறோம்'' என்றார்.
அதன்பிறகு, ‛‛தேர்தல் நெருங்கிவிட்டது. திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு தொடங்கி விட்டதா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு திருமாவளவன், ‛‛இது எல்லாம் யூகமான கேள்வி. அதுதொடர்பாக நாங்கள் எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் தான் நாங்கள் கூட்டணி பற்றி பேசுவோம். மற்ற நேரங்களில் மக்கள் பிரச்சனையை பற்றி பேசுவோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications