இதையே திருப்பி சொல்லாதீங்க.. அப்படியே முடங்கிய விஜய்.. மனசையே விட்டுட்டாராம்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழக அரசியலில் கடந்த 48 மணிநேரமாக நீடித்து வரும் இழுபறி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று இருந்த அந்த உற்சாகம், தற்போது அவர் முகத்தில் மருந்துக்கும் இல்லை. கோட்டையை நோக்கிப் பாயத் துடித்த 'விஜய்' இப்போது பனையூர் இல்லத்தில் தனிமையில் முடங்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.
கனவாகப் போகிறதா முதல்வர் நாற்காலி?
108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோது, "தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய் தான்" என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது. ஆனால், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் அவருக்குச் சாதகமாக அமையவில்லை. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இருந்தும், மெஜாரிட்டிக்குத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 6 இடங்கள் தேவைப்படுகின்றன.

திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் மற்றும் விசிக தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டாலும், அவர்கள் நேரில் வந்து ஆதரவு கடிதம் கொடுக்கத் தயங்குவது விஜய்யை நிலைகுலையச் செய்துள்ளது. விஜய்க்கு ஆதரவுதான்.. ஆனால் அது ஆளுநருக்கு எதிரான மோதலால்தானே தவிர.. ஆட்சி அமைக்க இல்லை என்பதில் விசிக, கம்யூனிஸ்டுகள் உறுதியாக உள்ளன.
ஆட்சி அமைக்க வரமாட்டோம் என்ற கூட்டணிக் கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு, விஜய்யின் நம்பிக்கையை மெல்ல மெல்லக் குறைத்து வருகிறது.
கைவிட்ட ஆளுநர் - பறிபோன கான்வாய்!
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் இரண்டு முறை சந்திக்க வாய்ப்பளித்தும், "மெஜாரிட்டியை நிரூபிக்கும் கடிதங்கள் இல்லாமல் உங்களை அழைக்க முடியாது" என்று கறாராகக் கூறிவிட்டார். இது விஜய்க்கு விழுந்த முதல் அடி என்றால், அடுத்த அடி இன்னும் மோசமாக இருந்தது.
முதல்வர் பதவிக்கு மிக அருகில் இருந்த விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த 'ஜெட் பிளஸ்' பாதுகாப்பு மற்றும் கார் கான்வாய் (Convoy) வசதிகள் திடீரெனத் திரும்பப் பெறப்பட்டுள்ளன. நேற்று முதல்நாள் இரவு வரை சைரன் ஒலியோடு பனையூரைச் சுற்றி வந்த பாதுகாப்பு வாகனங்கள், இன்று காலை அங்கிருந்து அகற்றப்பட்டன. ஒரு குழந்தையிடமிருந்து மிட்டாயைப் பிடுங்குவது போல, அதிகாரம் கைக்கு வரும் முன்னே அதை அரசு நிர்வாகம் பறித்துக் கொண்டது விஜய்யை மிகவும் காயப்படுத்தியுள்ளது.
பனையூர் இல்லத்தில் மௌனம்
தற்போது தனது இல்லத்தில் மிக நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள விஜய், யாரிடமும் முகம் கொடுத்துப் பேசக்கூட விருப்பமில்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. முக்கிய கட்சி நிர்வாகிகள் கூட்டணி வந்துடும் என்று சொன்னால்.. இதையே திருப்பி சொல்லாதீங்க என்று கோபப்படுகிறாராம் விஜய்.
தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கும், தொண்டர்களுக்கும் என்ன பதில் சொல்வது என்ற தவிப்பு அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனாலும் மெஜாரிட்டி மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லையே!
"எல்லாம் கைக்கு வந்த பிறகு, நூலிழையில் நழுவிச் செல்வதைப் பார்க்கும்போது யாருக்குமே மனம் வலிக்கத்தான் செய்யும். விஜய் தற்போது ஒருவித மனச்சோர்வில் இருக்கிறார்" என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். தமிழக அரசியலில் நிலவும் இந்த 'ரிசார்ட் பாலிடிக்ஸ்' மற்றும் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் விஜய்க்குப் புதிய அனுபவமாக இருந்தாலும், அது அவருக்குத் தந்திருக்கும் வலி மிக அதிகம்.
விஜய் மீண்டும் எழுந்து வருவாரா அல்லது இந்த அரசியல் சதுரங்கத்தில் அமைதியாகி விடுவாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். தற்போது வரை, பனையூரில் மௌனம் மட்டுமே எஞ்சி நிற்கிறது.












Click it and Unblock the Notifications