விஜயகாந்த் தேசியவாதியா? மோடி சொல்வது சரியா?
சென்னை: தேசத்தை அதிகமாக நேசித்தவர் விஜயகாந்த் என்று புகழ் மாலை சூட்டி இருந்தார் பிரதமர் மோடி. அவர் சொல்வதைப்போல் தேசியவாதியா விஜயகாந்த் என்று கேள்வி இப்போது முன்வைக்கப்பட்டு வருகிறது.
சில நாட்கள் முன்னர் திருச்சியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன் தான் அனைத்தையும் விடத் தேசத்தை அதிகம் நேசித்தவர் விஜயகாந்த் . அரசியலில் தேசிய நலனையே எல்லாவற்றையும் விட அதிகமாக முன்னிறுத்தினார் விஜயகாந்த் என்று பேசி இருந்தார்.

பிரதமர் சொல்வதைப்போல் விஜயகாந்த் தேசியவாதியா? அதற்கு என்ன சான்றுகள் இருக்கின்றன என்று அலசி ஆராய்ந்தோம் நாம்.
சினிமாவில் தன்னை தேசியவாதியாக விஜயகாந்த் காட்டிக் கொண்டது பிற்காலத்தில்தான். ஆனால், அவர் அறிமுகமான 'அகல் விளக்கு' படத்தில் அவர் ஒரு கம்யூனிஸ்ட் அடையாளத்துடன்தான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.
அதில் அவர், 'என் உயிருள்ள வரை நான் தொழிலாளி வர்க்கத்திற்காகப் போராடிக்கிட்டே இருப்பேண்டா ' என்று வசனம் பேசுவார். இராமநாராயணன் இயக்கத்தில் வெளியான 'சிவப்பு மல்லி' படத்தில் கூட அவருக்கு முழு கம்யூனிஸ்ட் முகம் தான் கொடுக்கப்பட்டது.

விஜயகாந்த்தின் நிறம், அவர் பிறந்த வளர்ந்த பின்புலம் எல்லாம் அவருக்கு ஆரம்பக்காலங்களில் கம்யூனிஸ்ட் அடையாளத்தையே ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால், அவரை ஆரம்பக் காலங்களில் கம்யூனிஸ்ட் அமைப்புகள் தங்கள் சார்பாகத் திரையுலகில் தோன்றி இருக்கும் சிவப்பு நட்சத்திரமாகவே பார்க்க ஆரம்பித்தனர்.
அதற்கு முன்னால் பள்ளிக் காலங்களில் விஜயராஜ் ஆக அவர் இருந்தபோது அவரை அதிகம் ஈர்த்தது தமிழ் உணர்வுதான். அதற்குக் காரணம் திமுக. அவர் 1952இல் பிறந்தார். அவர் பிறந்த இதே காலகட்டத்தில்தான் திமுக ஒரு மாற்று அரசியலை முன்வைத்து தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்து.

அதன் தொடர்ச்சியாக 1962களில் இந்தி எதிர்ப்பு என்பது திமுகவின் பெரிய கொள்கை முழக்கமாக இருந்தது. அதன் தாக்கத்தால் நேரடியாக ஈர்க்கப்பட்டவர்கள் அன்றைய மாணவர்கள்தான். அந்தநாளில் விஜயகாந்த்திற்கு 10 வயது.
அவர் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் இந்திக்கு எதிரான போராட்டத்தில் தானும் கலந்துகொண்டதாகக் கூறி இருக்கிறார். அவருக்குத் தமிழ் மீது அளவுகடந்த பற்று இருந்ததால், அவர் பிறமொழிப் பாடங்களில் அதிக நாட்டம் கொள்ளவில்லை. அவருக்குத் தமிழ்தான் மூச்சாக இருந்தது என அவரது பள்ளித்தோழிகள் பலரும் பேசி இருக்கிறார்கள்.
திரை உலகில் அதிகம் அவர் நேசித்த நடிகர் எம்.ஜி.அர். பின்னாளில் அவர் கருப்பு எம்.ஜி.ஆர் என்ற அடையாளத்தோடு அரசியலில் முன் நிறுத்தப்பட்டார். அதுகூட விமர்சனத்திற்கு ஆளானது.

குறிப்பாக அந்த அடையாளத்தை நடிகர் வடிவேலு மிக மோசமாக விமர்சித்திருக்கிறார். அவருக்கு சினிமாவுலகில் எம்.ஜி.ஆரைப் பிடித்திருந்தாலும், பெரிய நெருக்கம் எல்லாம் காட்டியதில்லை. விஜயகாந்த்தின் திரையுலக எண்ட்ரி 1979இல் தான் நடந்தது. 1980களில் வெளியான தூரத்து இடி முழக்கம் தான் விஜயகாந்த்திற்குச் சிறிய அளவில் மக்கள் அறிமுகம் கிடைக்கத் தொடங்கியது.
அதன்பிறகு 'சட்டம் ஒரு இருட்டறை' 81இல்தான் வெளியானது. 1987இல் எம்.ஜி.ஆர் இறந்தே போய்விட்டார். அந்த இடைப்பட்ட காலத்தில் பெரிய அளவு எம்.ஜி.ஆருடன் விஜயகாந்த் சேர்ந்து பழகுவதற்கான வாய்ப்பு இல்லை என நாம் சொல்லவில்லை. அவரை அறிந்தவர்களே சொல்லி இருக்கிறார்கள்.
ஆக, அவரது நேரடி விருப்பத்திற்குரிய தலைவராக அன்றைய திமுக தலைவர் கருணாநிதிதான் இருந்தார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியிலிருந்தபோதுகூட விஜயகாந்த் ஈழத்தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில்தான் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அவரது மதுரை நண்பர்களையும் ஆரம்பக்காலங்களில் ஈழத்தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் கலந்துகொள்ள அறிவுறுத்தியுள்ளார். அவரது பேச்சைக் கேட்டு பழ.நெடுமாறனுடன் விஜயகாந்த் நண்பர்கள் சிறை சென்றுள்ளனர் என்பது வரலாறு.
பின்னால் திரையுலகில் நட்சத்திரமாக ஜொலிக்க தொடங்கிய காலத்திலும் அவர் ஈழத்தமிழர் நலன் தொடர்பாகப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். அதன் வெளிப்பாடாகவே அவர் தனது 100வது படமான கேப்டன் பிரபாகரன் என்ற படத்தைத் தேர்வு செய்தார்.

ஆக, அகல் விளக்கு படம் தொடங்கி, வைதேகி காத்திருந்தால், அம்மன் கோயில் கிழக்காலே, ஊமை விழிகள், கூலிக்காரன், உழவன் மகன், செந்தூரப்பூவே, பூந்தோட்டக் காவல்காரன், ராஜநடை வரை ஏறக்குறைய 90க்கு மேற்பட்ட படங்களில் அவர் தேசிய அடையாளத்தோடு நடித்தவர் இல்லை. பிற்காலத்தில் தான் பாகிஸ்தானை எதிரி நாடாகக் கட்டமைத்து அவர் இந்தியத் தேசிய உணர்வைப் பேசும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தொடங்க காலங்களில் இஸ்லாமிய நண்பர்களால் அதிக பயன்பெற்று வளர்ந்த விஜயகாந்த், தனது இறுதிக்கால சினிமா வாழ்க்கையில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாகக் கட்டமைக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். அதற்காக அவர் விமர்சிக்கவும் பட்டார்.

பிற்காலங்களில் அவருக்குள் ஒரு புதிய தேசப்பற்று உருவானது. ஆனால், அதிலும் அவர் குழப்பத்திலிருந்தார்.
குறிப்பாக விஜயகாந்த்திற்கு கிரிக்கெட் விளையாட்டு பற்றி எதுவும் தெரியாது. அவர் கபில்தேவ் மற்றும் சச்சின் ரசிகராக இருந்தார். அவர்களின் ஆட்டத்தை ரசிக்கும் அளவுக்கு அவருக்கு அறிவு இல்லை என்பதை அவரே பேட்டிகளில் கூறி இருக்கிறார்.
ஆனால், இந்தியா ஜெயிக்க வேண்டும் என்ற வெறி தனக்குள் இருந்ததாகச் சொல்லி இருக்கிறார். அந்த உணர்வு எல்லாம் அவர் காவல்துறை சார்ந்த வேடங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகுதான்.

'குழந்தை ஏசு', 'என் புருஷந்தான் எனக்கு மட்டும்தான்' 'மீனாட்சி திருவிளையாடல்' 'தம்பி தங்கக் கம்பி', 'சின்ன கவுண்டர்', போன்ற படங்களில் நடித்துக் கொடுக்கும்போது அந்த மனநிலையில் அவர் இல்லை. அவர் எந்தக் கதைகளிலும் நடிக்க விரும்பு ஒரு சராசரி கதாநாயகனாகவே இருந்தார்.
அவர் கட்சிக்குப் பெயர் வைத்தபோது 'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என்று வைத்தார். அதைப் பலரும் கிண்டல் செய்தார்கள். குறிப்பாகத் தேசியம் எப்படி திராவிடத்தோடு கலக்கும் என்று அடிப்படை கருத்து கூட தெரியாமல் கட்சிக்குப் பெயர் சூட்டி இருக்கிறார். அது அவரது அரசியல் குழப்பத்தைக் காட்டுகிறது என்றார்கள்.
அதற்கு விஜயகாந்த் பிடி கொடுக்கவில்லை. அவர் அந்தப் பெயரை விரும்பினார். அதில் தேசிய அடையாளம் தேவை என நினைத்தார்.
தேசிய அடையாளத்தை அவர் ஆரம்பத்திலேயே விரும்பி இருந்தால் தமிழ்ப் படங்களைத் தவிர வேறு மொழிகளில் நடிக்க மாட்டேன் என்று சபதம் எடுத்திருக்க முடியாது.
தமிழ்தான் தனது அடையாளம் எனப் பேசி இருக்க முடியாது. 'வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்' என்ற முழக்கத்தை முன்வைத்துத்தான் அவர் இந்திக்கு எதிராக நின்றார்.
பின்னாளில் மு.கருணாநிதி இந்த வாசகத்தை விஜயகாந்த் கையில் எடுக்கிறார் என்ற உடன் அவரது அதிகாரப்பூர்வ பத்திரிகையில் 'வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்' பயன்படுத்தத் தொடங்கினார். அது தொடர்பாக தேமுதிகவினருக்கும் திமுகவினருக்கும் வார்த்தைப் போர் கூட எழுந்தது.
ஆக, எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் விஜயகாந்த் அப்பட்டமான தேசிய வாதியாக இருந்ததில்லை. மு.கருணாநிதியை அரசியல் குருவாக வைத்துக் கொண்டே அவர் மூப்பனார் உடன் அரசியல் கற்று வந்தார்.
தேசியம் என்பது அவர் கட்சிப் பெயரிலிருந்தது. அவர் மனதில் தமிழைத் தவிர வேறு எதுவும் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.












Click it and Unblock the Notifications