முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தை.. அப்போ ஆரம்பிச்ச பிரச்னை.. இனி பாஜக அவ்ளோதான்: ஆர்.எஸ்.பாரதி பரபர!
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது பிறந்தநாளன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் "பிரதமராக யார் வரக்கூடாது என்பதே முக்கியம்" என்று பேசிய பிறகு தான் திமுகவுக்கு நெருக்கடி தரப்பட்டு வருகிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிலும், அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி. வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளே விடாத அதிகாரிகள்: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினரின் சோதனை நடைபெற்று வரும் நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொன்முடி வீட்டுக்கு வருகை வந்தனர்.சோதனை நடைபெறும் பொன்முடி இல்லத்திற்கு சென்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, "அமைச்சர் பொன்முடியை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை. பொன்முடியின் சட்ட ஆலோசகரான என்னை அமலாக்கத்துறை அனுமதிக்கவில்லை. எதற்காக இந்த சோதனை என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது. அமலாக்கத்துறை வழக்குகளில் இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா?
ஸ்டாலின் பேசிய பிறகுதான் நெருக்கடி: மத்திய பாஜக அரசின் ஆட்சி முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது. பாஜக இதுபோன்று தொடர்ந்து செய்தால், கர்நாடகாவில் பாஜகவுக்கு ஏற்பட்ட நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும். கர்நாடகாவில் பாஜகவுக்கு என்ன ஏற்பட்டதோ, அதுவே காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நடக்கும்.
திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது பிறந்தநாளன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமராக யார் வரக்கூடாது என்பதே முக்கியம் என்று கருத்து தெரிவித்ததற்கு பின்னர் தான் திமுகவுக்கு அதிக நெருக்கடி தரப்பட்டு வருகிறது.
ஆளுநர் மற்றும் அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு மத்திய பாஜக அரசு நெருக்கடி கொடுக்கிறது.

அன்றும், இன்றும்: அமலாக்கத்துறை தொடர்ந்த எந்த வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, பொன்முடியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள்.
பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்ற போது அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் சோதனை நடைபெற்றது. இன்று பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் பொன்முடி வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. அமைச்சர் பொன்முடி இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை அகில இந்திய பிரச்சனை" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications