அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்தால் போன உயிர் திரும்ப வருமா? கேட்பது நாராயணன் திருப்பதி!
சென்னை: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்தால் போன உயிர் திரும்ப வருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.
ஒடிசாவில் நிகழ்ந்த கோரமண்டல் ரயில் விபத்தில் வரலாறு காணாத வகையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 280ஐ கடந்துள்ள நிலையில் அவர் இந்தக் கேள்வியை செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த தொலைபேசி வழி பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலினும், துறை அமைச்சர் செந்தில்பாலாஜியும் ராஜினாமா செய்தார்களா எனவும் அவர் வினவியுள்ளார். ரயில் விபத்தை வைத்து பரபரப்பு கிளப்ப வேண்டாம் எனவும் தனது கோபத்தை கொட்டித்தீர்த்தார் நாராயணன் திருப்பதி.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள் என்றும் கவச் என்ற ரயில் பாதுகாப்பு திட்டத்தை கடந்தாண்டு முதல் ரயில்வே நிர்வாகம் அமல்படுத்திக் கொண்டே வருவதாகவும் ரயில்வே துறையை நவீனமயமாக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
கோரமண்டல் ரயில் விபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது ஏற்க இயலாத கோரிக்கை என பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் கூறியிருக்கிறார். ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கடந்த 2 நாட்களாக போர்க்குரல் உயர்த்தி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை பொறுத்தவரை ரயில்வே துறைக்கு மட்டுமல்ல தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் அவர் உள்ளார் என்பது கூடுதல் தகவலாகும். இதனால் அவரிடமிருந்து ரயில்வே துறை பறிக்கப்பட்டு மற்றொருவருக்கு கூடுதல் பொறுப்பாகவே அல்லது தனியாகவே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications