சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 3வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு.. பரபரக்கும் சோதனை!
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தொழிலதிபர் பசுபதி கோபாலன் வீட்டில் 3வது நாளாக இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் சுமார் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில், பெனிஸ் எனர்ஜி என்ற சோலார் பேனல் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தொழிலதிபர் பசுபதி கோபாலன் உள்ளார். இவர் சன் எடிசன் நிறுவனத்தை நடத்தி வந்தவர்.

பசுபதி கோபாலன் நடத்தி வரும் பெனிஸ் எனர்ஜி நிறுவனம் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியதால், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, அதன் அலுவலகத்திலும், பசுபதி கோபாலன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடந்த 2 நாட்களாக இந்தச் சோதனை நடந்து வரும் நிலையில், இன்று 3வது நாளாக இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் 10 இடங்கள், மும்பை உட்பட, நாடு முழுதும் 30 இடங்களில், வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
மேலும், சென்னை தியாகராய நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள 'ஒயிட் பயர்' என்ற வைர நகைக்கடை, ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஈ.எப்.ஐ.எப் என்ற வைர நகைக்கடையிலும், அதன் உரிமையாளர் வீடுகளிலும், சோதனை நடைபெற்றுள்ளது.
சென்னை தியாகராய நகர், பசுல்லா சாலையில், ரெபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இந்நிறுவனம் சார்பில், நிலக்கரி இறக்குமதி, மின்சார கார்களுக்கான பேட்டரி தயாரிப்பு, குளிர்சாதனம் மற்றும் குளிர்பதன பெட்டிகளுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிறுவனத்தின் தொழிற்சாலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளன. வருமான வரித்துறை அதிகாரிகள், ரெபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில், நேற்று சோதனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications