ரகசிய அறை.. ஜெகத்ரட்சகன் வீட்டு சுவரை தட்டிப்பார்த்த அதிகாரிகள்.. பைரவா பட பாணி ஐடி ரெய்டு
சென்னை: வீட்டிற்குள் ரகசிய அறை ஏதேனும் வைத்திருக்கிறார்களா என்று ஜெகத்ரட்சகன் வீட்டு சுவற்றை அதிகாரிகள் தட்டிப்பார்த்து சோதனை நடத்தியுள்ளனர். அதே போல விலை உயர்ந்த கார்களிலும் ஆவணங்கள், பணம் எதுவும் பதுக்கப்பட்டுள்ளதா என்றும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் குடும்பத்தினர்மீது புகார் எழுந்தது. அதனால் அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல சட்டவிரோதமாக வெளிநாட்டில் முதலீடு செய்ததாக, அவருடைய ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

அதைத் தொடர்ந்து, தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவுக்குப் புகார்கள் சென்றதாகக் கூறப்படுகிறது. நேற்றைய தினம் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அவர் தொடர்புடைய ஹோட்டல், மதுபான ஆலைகள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் பல்வேறு இடங்களில் மட்டுமன்றி, புதுச்சேரியிலும் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
நேற்று இரவு வரை இந்தச் சோதனை நீடித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
ஜெகத்ரட்சகன் வீட்டிற்கு சென்ற இரண்டு பெண் அதிகாரிகள் வீடு முழுவதும் சல்லடையாக சலித்தனர். பணம் எண்ணும் இயந்திரத்தை கொண்டு வந்து எவ்வளவு பணம் இருக்கிறது என்று கவுண்ட் செய்தனர். வீடு முழுவதும் சுற்றி வந்த பெண் அதிகாரிகள் சுவர்களை தட்டிப்பார்த்து ரகசிய அறை ஏதாவது இருக்கிறதா என்று சோதனை நடத்தினர்.
ஜெகத்ரட்சகன் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த கார்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் விட்டு வைக்கவில்லை. விஜய் நடித்த பைரவா பட பாணியில் விலை உயர்ந்த கார்களை எல்லாம் திறந்து பார்த்து அதற்குள் இருந்த ஆவணங்களையும் கைப்பற்றினர்.
பாரத் பல்கலைக்கழக ஊழியர்களிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், ஆவணங்களுடன் இருந்த பெண் ஊழியர் ஒருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் தொடங்கி அவரது சாம்ராஜ்யம் முழுவதையும் சல்லடை போட்டு சலித்து வருகின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள். இந்த சோதனை எத்தனை நாட்களுக்கு நீளும் என்பது அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த விசயம்.












Click it and Unblock the Notifications