பலூன் கடை டூ வசந்த் &கோ சாம்ராஜ்யம்! வசந்த குமார் மறைந்து 2 ஆண்டுகள்! ஒரு சிறிய ப்ளாஷ் பேக்!
சென்னை: தமிழகத்தின் தலைசிறந்த தொழிலதிபராக மட்டுமல்லாமல் காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை குன்றாக திகழ்ந்து மறைந்த வசந்த்குமாரின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
வீட்டில் ஏழாவது பிள்ளையாக பிறந்த இவர் சிறு வயது முதலே கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து வாழ்க்கையில் சிகரம் தொட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உழைப்பால் உயரம் தொட்டு இளைஞர்களுக்கு சிறந்த முன் மாதிரியாக திகழ்ந்து மறைந்த வசந்தகுமார் பற்றிய சிறிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

குமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை பூர்வீகமாக கொண்டவர் வசந்த்குமார். ஹரிபெருமாள் நாடார் -தங்கம்மையார் தம்பதிக்கு ஏழாவது பிள்ளையாக பிறந்த வசந்த்குமார் வீட்டின் கடைக்குட்டி செல்லம். அகஸ்தீஸ்வரத்தில் பியூசி வரை முடித்துவிட்டு நாகர்கோவில் இந்து கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் பயின்று பட்டம் பெற்றார். விவரம் தெரியத் தொடங்கிய நாள் முதல் வசந்த்குமார் வீட்டில் சும்மா இருந்ததில்லை.

சர்பத் கடை
பள்ளிப் பருவத்திலேயே விடுமுறை நாட்களில் சர்பத் கடை போடுவது, திருவிழா காலங்களில் பலூன் கடை போடுவது என பெற்றோரின் பாரத்தை குறைப்பதற்கான அனைத்து வேலைகளையும் மேற்கொண்டார். இந்நிலையில் கல்லூரி காலத்தை நிறைவு செய்த வசந்த்குமார் தனது மூத்த சகோதரர் குமரி அனந்தன் சென்னையில் வசித்ததால் அவருக்கு உதவியாக இருப்பதற்கு குமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

சேல்ஸ் பாய்
சென்னை மவுண்ட் ரோட்டில் இருந்த வி.ஜி.பி. வீட்டு உபயோகப்பொருட்கள் ஷோரூமில் விற்பனையாளராக தனது பணியை தொடங்கிய வசந்த்குமார் தொழிலில் கெட்டிக்காரராக திகழ்ந்தார். வசந்த்குமாரின் பேச்சும், சுறுசுறுப்பும் விற்பனையை இரட்டிப்பாக்கியதால் அவர் கிளை மேலாளாராக நியமிக்கப்பட்டார். இதனிடையே கட்சி சார்ந்த மன்றம் ஒன்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வசந்த் குமார் காவல்நிலைய விசாரணைக்கு சென்றிருக்கிறார்.

மும்பைக்கு மாற்றம்
இதையறிந்த அவர் பணியாற்றிய நிறுவனத்தின் நிர்வாகம் வசந்த்குமாரை அழைத்து உங்களால் கடைக்கு கெட்டப் பெயர் ஏற்படும் எனக் கூறி மும்பையில் உள்ள கிளைக்கு மாறுதலாகி செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது. மொழி தெரியாத மாநிலத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டதால் பணியை துறக்க முடிவெடுத்த வசந்த்குமார் கணக்கு வழக்குகளை முடித்துவிட்டு வெளியேறிவிட்டார்.

பெரிய உதவி
வேலையை துறந்த நிலையில் அடுத்தக்கட்டமாக என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்ற வசந்த்குமாருக்கு அசோக் நகர் ஹவுசிங் போர்டு மேனேஜர் ஞானசேகரன் தனக்கு சொந்தமான கடையை கொடுத்து உதவுகிறார். திசை தெரியாமல் நின்ற வசந்த்குமாருக்கு கலங்கரை விளக்கின் வெளிச்சக் கீற்று தென்படத் தொடங்கியது. உடனடியாக வசந்த் அண்ட் கோ என்ற போர்டை பொருத்தி கடையை தொடங்குகிறார்.

நம்பிக்கை நாணயம்
வியாபாரத்தில் நாணயமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை தாரக மந்திரமாக கொண்ட வசந்த்குமார் படிப்படியாக முன்னேறி இன்று நூற்றுக்கணக்கான கிளைகளை ஆலப்பரப்பிவிட்டு மறைந்திருக்கிறார். வீட்டு உபயோகப் பொருட்களை பொருத்தவரை வசந்தகுமார் உருவாக்கியது வெறுமனே கிளைகள் மட்டுமல்ல அது ஒரு சாம்ராஜ்யமாக பார்க்கப்படுகிறது.

குடும்பத்தினர் அஞ்சலி
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இதே ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை உயிரிழந்தார். இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வசந்தகுமாரின் நினைவிடத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் இன்று நினைவஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications