குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு
சென்னை: அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவுக்கு பின்னால் குதிரை பேரம் எதுவும் இல்லை என்றும், அது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். அதிமுகவை தவெக உடைத்ததாக கூறப்படுவது வெறும் கற்பனை என்றும் அவர் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தல் தமிழக அரசியல் களத்தையே திருப்பி போட்டுள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வந்து புதுக் கட்சி ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். ஆளும் கட்சியாக இருந்து 29 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த திமுக எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றது.

இன்னொரு புறம் ஆளும் மத்திய அரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் இருந்து இப்போது படு தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கனவே அதிமுக தலைமையை ஏற்க முடியாததால் பல பிரிவுகளாக பிரிந்து இருந்த அந்த கட்சி தற்போது மீண்டும் அதே போன்று ஒரு நிலையை சந்தித்தது. எடப்பாடியிடம் இருந்து பிரிந்து சிவி சண்முகம், சி விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி என தனி அணியாக உருவெடுத்தனர்.
மேலும் சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் மீண்டும் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதனால் தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கின. மேலும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயுஎம்.எல் உள்ளிட்ட கட்சிகளும் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் பின்னர் எஸ்பி வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விஜய் அமைச்சரவையில் இடம் அளிக்கவில்லை.
இதனால் மீண்டும் எஸ்பி வேலுமணி தரப்பில் இருந்த எம்.எல்.ஏக்களில் சிலர் எடப்பாடியுடன் இணைந்தனர். இசக்கி சுப்பையா உள்பட 4 எம்.எல்.ஏக்கள் தங்கள் எம்.எல்.ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு விஜய்யின் தவெகவில் இணைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி தரப்பினர், அதிமுக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு முன் வைத்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவுக்கு பின்னால் குதிரை பேரம் எதுவும் இல்லை.. அதிமுகவை தவெக உடைத்ததாக கூறப்படுவது வெறும் கற்பனை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த காதர் மொய்தீன் கூறியதாவது:- "குதிரை பேரம் இல்லை.. அது கற்பனை.. அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவில் குதிரை பேரம் கிடையாது. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அதிமுகவை தவெக உடைக்கவில்லை. அது கற்பனை. குதிரை பேரம் என்பது நீங்களாக வைத்துக்கொண்ட பெயர். ஓட்டு போட்ட மக்கள் அதை சொல்லட்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications