விளையாட்டு... சினிமா... அரசியல்... அனைத்திலும் அப்டேட்டாக இருந்தவர் அன்பழகன்
சென்னை: மறைந்த ஜெ.அன்பழகனுக்கு அரசியல் மட்டுமல்லாமல் விளையாட்டு, சினிமா, உள்ளிட்ட துறைகளிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது.
கட்சிப்பணிகளில் எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும், விளையாட்டு போட்டிகளை பார்க்காமலோ, சினிமாவை பற்றி விவாதிக்காமலோ அவர் இருந்ததில்லை.
மேலும், ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் எந்தக் கேள்வியை அவரிடம் முன்வைத்தாலும் சற்றும் பதற்றமில்லாமல் எதார்த்தத்தை பேசக்கூடியவர்.

கதை விவாதம்
மறைந்த ஜெ.அன்பழகனை பொறுத்தவரை அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல. கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டு ஆர்வலரும் கூட. அரசியல்ரீதியாக சூடான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் கூட கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டுவார். அதேபோல், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற முறையில் கதை விவாதங்களிலும் பங்கேற்று தனது சினிமா ரசனையையும் வெளிப்படுத்துவார்.

அடையாளம் கண்டு
வழக்கமான அரசியல்வாதிக்கு உரிய குணங்களில் இருந்து சற்று மாறுபடக் கூடியவர் ஜெ.அன்பழகன். எப்போதும் புதிய இளைஞர்களை கட்சியில் முன்னிறுத்துவார். தன்னை சுற்றி வயதான கும்பலை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் எப்போதும் இளைஞர்கள் புடை சூழ வலம் வருவார் ஜெ.அன்பழகன். அதற்கு காரணம் அவர்கள் மீது இவர் காட்டும் அணுசரனையும், வளர்த்துவிடும் எண்ணமும் தான்.

கவனிக்கவில்லை
கட்சிப்பணிகளை மட்டுமே தனது முழுமுதற் பணியாக நினைத்து அதற்காகவே தனது இறுதி மூச்சு வரை சுற்றி வாழ்ந்து வந்தார் ஜெ.அன்பழகன். உடல்நலத்தை பார்த்துக்கொள்ளாமல் அதில் சற்று கவனக்குறைவாக இருந்ததால் இயற்கையிடம் தோல்வியை கண்டுள்ளார் இவர். கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனை ஏற்கனவே உள்ள நிலையில் கொரோனா தொற்றால் அதிலிருந்து மீள முடியாமல் மீளா துயில் கொண்டுவிட்டார் ஜெ.அன்பழகன்.

மரணம் பற்றி அன்பழகன்
'' எனக்கு பிறகும் இந்தக் கழகம் இருக்கும், நான் மறைந்தாலும் கழகத்தின் கொள்கைகளை காக்கும் சின்னமாக விளங்குவேன்'' என கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தனது சகோதரர் மகள் திருமண விழாவில் பேசியிருந்தார் ஜெ.அன்பழகன். அதனை இப்போது சுட்டிக்காட்டும் அவரது ஆதரவாளர்கள் ஜெ.அன்பழகன் மறைவை எண்ணி தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications