ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்தோமா? ஜெ.தீபா மறுப்பு! தம்மை கொல்ல சசிகலா சதி செய்ததாக பகீர் புகார்
சென்னை: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தமது தாயார் மீதும் தம் மீதும் சசிகலா தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா வாக்குமூலம் அளித்திருந்தார். பெங்களூர் சிறையில் இருந்தபடியே எழுத்துப்பூர்வமாக இந்த வாக்குமூலத்தை சசிகலா அளித்திருந்தார்.
சசிகலா தம்முடைய வாக்குமூலத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மனைவி விஜயலட்சுமி, அவரது மகள் ஜெ.தீபா ஆகியோர் குறித்து திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அந்த வாக்குமூலத்தில், ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டம் வரையில் ஜெ.தீபா மீது நல்ல மதிப்பு கொண்டிருக்கவில்லை.

ஜெ. தீபா குறித்து சசிகலா சொன்னது
அதற்கு காரணம் ஜெ.தீபா, அவரது தாயாரைப் போலவே நடந்து கொள்கிறார் என ஜெயலலிதா பலமுறை என்னிடம் சொல்லியது உண்டு. ஜெ.தீபாவின் தாயார் ஜெ.விஜயலட்சுமி, பிரதமராக நரசிம்மராவ் இருந்த போது, ஜெயலலிதாவின் நன்மதிப்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு தேவை என பொய்ப் புகார் கொடுத்தார். அதேபோல கருணாநிதி, வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோரை சந்தித்து ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டார். விஜயலட்சுமி போன்றே குணநலன்களை ஜெ.தீபாவும் கொண்டிருக்கிறார் என்பதே ஜெயலலிதாவின் எண்ணம். அதனால்தான் ஜெ.தீபாவிடம் இருந்து ஜெயலலிதா விலகியே இருந்து வந்தார் என கூறியிருந்தார்.

ஜெ. தீபா திட்டவட்ட மறுப்பு
சசிகலாவின் இந்த குற்றச்சாட்டுகளை ஜெ.தீபா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக ஜெ.தீபா கூறியிருப்பதாவது: சசிகலாவின் உறவினர் சுதாகரனை வளர்ப்பு மகனாக ஜெயலலிதாவை தத்தெடுக்க வைக்க உள்ளதாக என்னுடைய தாயாருக்கு தகவல் கிடைத்திருந்தது. அப்போது நானும் என் தந்தையும் என் தம்பி ஜெ.தீபக் மைனர் என்ற காரணத்தால் நோ அப்ஜெக்சன் சான்றிதழ் கொடுக்காமல் இருந்திருந்தால் சுதாகரன் பெயருக்கு எதனையும் மாற்ற முடியாது என்ற நிலை இருந்தது. அப்போது என் தந்தை இறந்த சில மாதங்களில் இந்த விவரங்களை பிரதமராக இருந்த நரசிம்மராவுக்கு தந்தி மூலம் தெரிவித்தார் என் தாயார்.

நரசிம்மராவுக்கு டெலிகிராம் கொடுத்தது ஏன்?
சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுக்க வைக்கும் சதியில் இருந்து என்னுடைய அத்தையை (ஜெயலலிதாவை) காப்பாற்ற எங்கள் குடும்பம் முயற்சி செய்தது. அதன் ஒரு பகுதியாகத்தான் பிரதமராக இருந்த நரசிம்மராவுக்கு என்னுடைய அம்மா டெலிகிராம் மூலம் தெரிவித்திருந்தார். அப்போது சசிகலா குடும்பத்தால் எங்கள் குடும்பத்துக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதையும் அதில் என் அம்மா தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார். என் அத்தையும் இந்த சதியில் சிக்கியிருப்பதால் அவரையும் காப்பாற்ற வேண்டும் என்றுதான் இந்த டெலிகிராமை என் அம்மா கொடுத்தார்.

என் தந்தை திடீர் மரணம், என்னை கொல்ல முயற்சி- ஜெ.தீபா
1994-ம் ஆண்டு இருசக்கர வாகன விபத்தில் நான் சிக்கினேன். அதில் இருந்து அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். பின்னர்தான், அது என்னை கொல்ல நடந்த முயற்சி என்பதை புரிந்து கொண்டேன். என் அத்தையுடன்(ஜெயலலிதா) நெருக்கமான தொடர்பில் இருந்த நிலையில் என் தந்தை ஜெயக்குமார் திடீரென 48 வயதில் மரணம் அடைந்தார். என் அப்பா இறந்த போது, எங்கள் வீட்டில் இருந்த புதிய வேலையாட்கள் அங்கிருந்து ஓடிப் போய்விட்டனர். என் அப்பாவை நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்துவிட்டதாக தெரிவித்தனர். என் தந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என மருத்துவமனைக்கு சில அதிகாரிகள் மிரட்டல் விடுத்திருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம். இது தொடர்பாக அத்தை ஜெயலலிதா பின்னர் கேட்டறிந்தார் என தெரியவந்தது.என்னை கொலை செய்ய பலமுறை முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் ஆண்டவன் அருளால் நான் அவற்றில் இருந்து தப்பிவிட்டேன்.

சசிகலா எனும் பூனைக்குட்டி வெளியே வந்தது
இதனால்தான் அவர்களிடம் இருந்து நாங்கள் விலகி இருக்கிறோம். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதாகவே இப்போது சசிகலா தமது சொந்த வாக்குமூலத்தின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. இந்த வாக்குமூலத்தின் மூலம் என்னுடைய அத்தையையும் அவரது குடும்பத்தையும் எப்படியெல்லாம் பழிவாங்கி சீரழித்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் நல்லம்மா நாயுடு ஆணையத்திடம் இருக்கிறது. இவை எல்லாம் என்னுடைய கதைகள் அல்ல. உண்மைகளை திசை திருப்பவும் என் மீது அவதூறை பரப்பவும் உள்நோக்கத்துடன் சசிகலா இத்தகைய வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இவ்வாறு ஜெ.தீபா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications