வாட்ஸ் ஆப்பில் களமிறங்கிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள்.. அரசியலுக்கு வருகிறாரா ஜெ தீபா?
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா அரசியலுக்கு வர போகிறாரா என்ற கேள்வி எழுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த போதும் சரி அவரது இறப்பிலும் சரி அண்ணன் மகள் தீபாவுக்கு பார்க்க "சிலர்" அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
ஜெயலலிதாவுக்கு அண்ணன் இருப்பது தெரியும். ஆனால் அவருக்கு தீபா, தீபக் ஆகியோர் இருப்பதும், அதில் தீபா, அச்சு அசல் அத்தையை போலவே இருப்பதும் ஜெயலலிதா இறந்த பிறகுதான் வெளியுலகிற்கு தெரியவந்தது.
சரிப்பட்டு வராது! 'ஜெ’ அஸ்திரத்தை கையிலெடுத்த எடப்பாடி! ஆளும் கட்சிக்கு டஃப் கொடுக்க எடுத்த முடிவு.!
ஜெயலலிதா இறப்பு
ஜெயலலிதா இறந்தவுடன் தீபக், தீபா ஆகியோர் வெளியே வந்தனர். ஜெ இறப்பின் போது தீபக் மட்டும் தனது அத்தைக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்திருந்தார். ஆனால் தீபாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தி நகர் வீட்டில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஜெயலலிதா போல் அங்கு கூடிய மக்களுக்கு தீபாவும் கை அசைத்தார்.
தீபா சாயல்
ஜெயலலிதா போலவே தீபாவும் இருப்பதால் அவருக்கு அதிமுக தொண்டர்கள் பலர் ஆதரவு தெரிவித்ததாக சொல்லப்பட்டது. அவ்வப்போது தீபாவும் பிரஸ் மீட் நடத்தி தனது இருப்பை காட்டிக் கொண்டார். பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார்.
ஜெயலலிதா நினைவிடம்
இதையொட்டி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓபிஎஸ் அஞ்சலி செலுத்த தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அது போல் அங்கு ஜெ தீபாவும் வந்திருந்தார். இருவரும் ஒன்றாகவே ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது ஜெ தீபா செய்தியாளர்களை சந்தித்த போது எனது அரசியல் பிரவேசம் இன்று முதல் தொடங்கியது. நானும் ஓபிஎஸ்ஸும் இரு கரங்களாக இணைந்து செயல்படுவோம் என கூறிய தீபா, சசிகலாவை விமர்சித்திருந்தார்.
தீபாவுக்கு வரவேற்பு
இதையடுத்து கிரீன்வேஸ் சாலையில் இருந்த ஓபிஎஸ் வீட்டுக்கு தீபா சென்றார். அவரை ஓபிஎஸ் மனைவி ஆரத்தி எடுத்து வரவேற்றார். இது ஒருபுறம் இருக்க இந்த சந்திப்பு நடந்த சில நாட்களிலேயே ஜெயலலிதா பிறந்தநாளில் தீபா திடீரென ஒரு அரசியல் அமைப்பை தொடங்கினார். அற்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என வைத்திருந்தார்.
ஜெ தீபா
ஓபிஎஸ்ஸுடன் இணைந்து பணியாற்றுவேன் என கூறிவிட்டு ஜெ தீபா திடீரென அரசியல் கட்சியை தொடங்கியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அத்துடன் அதிமுகவை கைப்பற்றுவேன் என்றும் சூளுரைத்திருந்தார். இந்த நிலையில் நீட் தேர்வை கண்டித்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதா குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். இந்த நிலையில் ஆர் கே நகர் இடைத்தேர்தல் அதாவது தனது அத்தை இறந்ததால் அந்த தொகுதியிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
விருப்பமனு
அந்த இடைத்தேர்தலில் அவர் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவில் ஏதோ தவறு இருந்ததால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுகவிலிருந்து சில நிர்வாகிகள் விலகி ஜெ தீபாவின் அரசியல் அமைப்பில் இணைந்தனர். ஆனால் இந்த அமைப்பு ஆரம்பித்த வேகத்தில் கரைந்தது. நிறைய பேர் கூண்டோடு ராஜினாமா செய்துவிட்டார்கள்.
அரசியலுக்கு வருகிறாரா தீபா
இதையடுத்து சில நாட்கள் அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்த நிலையில் போயஸ் தோட்ட இல்லம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் தனது தம்பி தீபக்குடன் தீபா வென்றார். இந்த நிலையில் தற்போது செய்தியாளர்கள் கொண்ட வாட்ஸ் ஆப் குரூப்பை தொடங்கியுள்ளார். இதனால் அவர் அரசியலுக்கு வர போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லாவிட்டால் அதிமுகவை கைப்பற்றுவதில் சசிகலாவுக்கு போட்டியாக வருவாரா? இல்லை சசிகலாவின் கைகளுக்கு அதிமுக செல்வதை தடுத்து நிறுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.