அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஜே.எம். பஷீர்.. ஓபிஎஸ்ஸுடன் சந்திப்பால் சலசலப்பு!
சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியை விட்டு நீக்க சொன்னதால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பஷீர் இன்றைய தினம் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை பசும்பொன்னில் சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவால் அதிமுகவில் பிரச்சினை ஏற்பட்டு இரண்டாக பிரிந்தது. பின்னர் சசிகலாவை ஒதுக்கி வைப்பதாக இருந்தால் ஒன்றுபட்ட அதிமுகவுக்கு வாய்ப்புள்ளதாக தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் நிபந்தனையை முன் வைத்தார்.
இதையடுத்து முதல்வராக இருந்த எடப்பாடி தரப்பும் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ஓபிஎஸ் தரப்பு முன் வைத்த கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டது. இதையடுத்து தமிழகத்தின் துணை முதல்வரானார் ஓபிஎஸ். இவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆனார்.

வேட்பாளர்கள்
இந்த நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு, நிர்வாகிகள் நியமனம், எதிர்க்கட்சித் தலைவர் பதவி, தென் மாவட்ட நிர்வாகிகளுக்கான முக்கியத்துவமின்மை உள்ளிட்ட காரணங்களால் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு வரை சசிகலாவை கட்சியில் சேர்ப்பதில் இருவரும் ஒருமித்த கருத்து இருந்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இருவரும் முரண்பட தொடங்கிவிட்டனர்.

அதிமுக
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளிக்கையில், தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என ஓபிஎஸ் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. சசிகலாவை கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என ஈபிஎஸ் கூறி வரும் நிலையில் ஓபிஎஸ் கூறியது முரண்பாடாகவே பார்க்கப்பட்டது.

இரு தரப்பு ஆதரவாளர்கள்
இதையடுத்து இரு தரப்பு ஆதரவாளர்களும் பரஸ்பரம் தங்கள தரப்பு நியாயத்தை முன் வைத்தாலும் சசிகலாவுக்கு பச்சை கொடி காட்டியது ஏன் என இதுவரை ஓபிஎஸ் விளக்கவில்லை. அது போல் ஓபிஎஸ் கருத்துக்கு பதிலடியையும் எடப்பாடி இதுவரை கொடுக்கவில்லை. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தொடர் சரிவை சந்தித்துள்ளது. இதற்கு சிஏஏ உள்ளிட்ட சட்டங்களுக்கு அதிமுக நாடாளுமன்றத்தில் ஆதரவு கொடுத்தது தான் என அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவுத் துணைச் செயலாளர் ஜே எம் பஷீர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

எடப்பாடியை நீக்க கோரிக்கை
எனவே அதிமுக தேர்தல் தோல்விக்கு காரணமாக எடப்பாடி பழனிச்சாமியை தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என பேட்டி அளித்தார். இதையடுத்து பஷீர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்ட பஷீரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் அவருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அதிமுகவின் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டனர்.

ஓபிஎஸ்ஸுடன் சந்திப்பு
இந்த நிலையில் பசும்பொன்னில் தேவர் நினைவிடம் சென்றுவிட்டு வந்த ஓ பன்னீர் செல்வத்தை கட்சியினர் சந்தித்தனர். அப்போது அவரை சந்தித்த பஷீர், அவருக்கு வணக்கம் வைக்கிறார், ஓபிஎஸ்ஸும் வணக்கம் வைக்கிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பஷீருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என அறிக்கையில் கையெழுத்திட்ட ஓபிஎஸ்- பஷீர் சந்திப்பு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த வீடியோவில் பஷீருக்கு பதில் வணக்கம் வைக்கும் ஓபிஎஸ், அவரிடம் எதுவும் பேசாமல் கையை காட்டி வழிவிடுமாறு சொல்கிறார். உடனே பஷீரின் முகம் மாறிவிடுகிறது. எனவே பஷீரை தவிர்க்க முடியாததால் ஓபிஎஸ் வணக்கம் வைத்துவிட்டு பின்னர் சர்ச்சை ஏற்படக் கூடாது என்பதாலும் அவர் மேற்கொண்டு தம்மிடம் பேசி விடக் கூடாது என்பதாலும் வழிவிடுமாறு ஓபிஎஸ் சொல்லியிருக்கலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications