ஒரு பக்கம் நிபா.. மறுபக்கம் கொரோனா.. பள்ளிகள் மீண்டும் மூடலா?.. ஜெ ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம்
சென்னை: நிபா வைரஸ் பற்றி தேவையற்ற பதற்றம் தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Recommended Video
மேலும் பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்பது தொடர்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் 9 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தன. அதனை தொடர்ந்து அவைகள் டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டன.

மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர்
பின்னர் தடுப்பூசிகள் அனைத்தும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுச்சுகாதரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஆகியோர் முன்னிலையில் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதன் பின்பு தேவை உள்ள மாவட்டங்களுக்கு அவை பிரித்து அனுப்பப்பட உள்ளது.

தடுப்பூசி
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெ ராதாகிருஷ்ணன் பேசுகையில், கேரளா மாநிலத்தில் தொடர்ந்து தொற்று பாதிப்பு 30 ஆயிரமாக இருந்து வருகிறது. அதேபோல் ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் 2 விழுக்காடு என்கிற அளவில் உள்ளது. தமிழகத்தில் 1% ஆக உள்ளது. தமிழகத்தில் 3.5 கோடி தடுப்பூசி நேற்றுவரை செலுத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சம்
தற்போது வரை 14.4 லட்சம் கையிருப்பு உள்ளது. நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 6.2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 12-ஆம் தேதி 10 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் தடுப்பூசி முகாமகள் நடத்த உள்ளது. கேரளாவில் 12 வயது குழந்தை நிபா வைரஸால் இறந்துள்ளார்.

நிபா வைரஸ்
இதையடுத்து எல்லையோர பகுதிகளில் கொரோனா மட்டுமல்லாமல் பிற காய்ச்சலையும் கண்காணித்து வருகிறோம். எனவே நிபா வைரஸ் பற்றி தேவையற்ற பதற்றம் தேவையில்லை. நாமக்கல், கடலூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளையும் கூர்ந்து கண்காணித்து வருகிறோம். அதேபோல் கோவை ,நீலகிரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம்.

பள்ளிகள் மூடலா
பள்ளிகள் மூடப்படுமா என்ற கேள்விக்கு, ஏற்கெனவே மாணவர்கள் வீட்டில் இருந்ததால் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறியதால் தான் படிப்படியாக பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மாணவர்களுக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக கண்காணித்து அதன் பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் இருந்த அறைகள் மூடப்படும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத வணிகர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தேவைப்பட்டால் சீல் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications