ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஓய்வு பெறுவதற்கு ஒரு மணிநேரம் முன்பாக சஸ்பென்ட்
சென்னை: ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான 'ஜேக்டோ'வும், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான 'ஜியோ'வும் இணைந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தின.

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ ஜியோ அமைப்பு தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டது. இதனால் உயர்நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளானது. இந்நிலையில் ஜேக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசுத் துறையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வந்தவர் மு.சுப்பிரமணியன். தமிழக அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவராகவும், ஜேக்டோ ஜியோ அமைப்பில் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் ஓய்வு பெறுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து வரும் 3ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் தமிழக அரசின் இந்த சஸ்பென்ட் நடவடிக்கை ஒரு பழிவாங்கும் செயல் என்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஓய்வு பெறுவதற்கு ஒரு மணி நேரம் முன்பே அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டதால் ஓய்வுக்கு பிந்தைய அரசின் சலுகைகளை அனுபவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications