சென்னை சாலி கிராமத்தில் இடிந்து விழும் அடுக்குமாடி குடியிருப்பு.. கட்டுமான நிறுவனம் சொன்ன குட்நியூஸ்
சென்னை: சென்னை சாலி கிராமத்தில் இடிந்துவிழும் அடுக்குமாடி குடியிருப்பை மறுசீரமைப்பு, மறுகட்டமைப்பு செய்துதர தயாராக இருக்கிறோம் என ஜெயின் ஹவுசிங் அன்ட் கன்ஸ்டிரக்சன் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் "ஜெயின் ஹவுசிங் அன்ட் கன்ஸ்டிரக்சன் லிமிடெட்" என்ற நிறுவனத்தின் சார்பில் 'ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர்' என்ற 17 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தன.

இதில் ஏ, பி, சி என 3 பிரிவுகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இதில் மொத்தம் உள்ள 600க்கும் மேற்பட்ட வீடுகளில் 472 குடியிருப்புகள் விற்பனை ஆகி உள்ளன. இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இந்த குடியிருப்பின் சில பகுதிகள் இடிந்து விழத்தொடங்கியது
தொடர்ச்சியாக குடியிருப்புகளின் பிற பகுதிகளிலும் பல்வேறு பாதிப்பு இருந்தது. இதுதொடர்பான அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தங்களை குறைகளை ஊடகங்களிடம் தெரிவித்தார்கள். அடுக்குமாடி குடியிருப்பின் நிலை குறித்து வீடியோக்களை பார்த்த பலரும் அச்சம் அடைந்தனர். இதனை சரி செய்ய அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனம் முன்வர வேண்டும் என்றும், எப்படி குடியிருப்புகள் இவ்வளவு வேகமாக இடிந்து விழும் நிலைக்கு வந்தது என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைக்க தொடங்கினர். இந்த விவகாரம் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்க விரும்புபவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இந்த சூழலில் "ஜெயின் ஹவுசிங் அன்ட் கன்ஸ்டிரக்சன் லிமிடெட்" நிர்வாக இயக்குனர் சச்சின் மேத்தா, தலைமை செயல் அதிகாரி விஜய்சகாவத், முதன்மை செயல்பாட்டு அதிகாரி ஆர்.வாசுதேவன் ஆகியோர் சென்னையில் வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்து வளசரவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பாக விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
வளரசவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் சிலவற்றில் குளோரைடு அரிப்பு காரணமாக இடிந்துவிழும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் சார்பில் 'கியூப்' என்ற நிறுவனத்தின் நிபுணர் குழுவும், எங்கள் தரப்பில் ஐ.ஐ.டி. குழுவும் இடிந்துவிழும் அடுக்குமாடி குடியிருப்பை ஆய்வுசெய்து அறிக்கை தர உள்ளது.
இவர்கள் அளிக்கும் பரிந்துரை அறிக்கை முடிவில், சாலிகிராமம் அடுக்குமாடி குடியிருப்பை மறுசீரமைப்பு அல்லது மறுகட்டமைப்பு செய்துதர நாங்கள் நிச்சயம் தயாராக உள்ளோம். இதுதொடர்பாக ஜெயின்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் உரிமையாளர்கள் நலச்சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறோம்.
மறுகட்டமைப்பு என்று அறிக்கை வரும்போது, அதற்கென்று தனி ஒப்பந்தம் போடப்பட்டு, மறுகட்டமைப்பு செய்து தருவதாக முடிவு செய்துள்ளோம். தண்ணீரில் குளோரைடு அதிகமாக இருந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளசரவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் ஏ மற்றும் பி பிளாக்கில் பிரச்சினை இருந்தாலும், சி பிளாக்கில் அப்படி எந்த பிரச்சனையும் எதுவும் இல்லை" இவ்வாறு தெரிவித்தனர். இதையடுத்து சென்னை வளரசவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications