திடீர் ‘பல்டி’.. சென்னைக்கு வந்தும் JAC கூட்டத்தில் பங்கேற்காத பவன் கல்யாண் கட்சி எம்.பி! என்னாச்சு?
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சென்னையில் இன்று நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வந்த ஜனசேனா கட்சி எம்.பி உதய் சீனிவாஸ், திடீரென கூட்டத்தை புறக்கணித்தார். அவர் இன்று நடந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, 'கூட்டு நடவடிக்கைக் குழு' அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் உள்பட 7 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார், பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி. ராமராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்திற்கு பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆதரவு தெரிவித்தது.
மேலும், ஜன சேனா கட்சி சார்பில் அக்கட்சியின் எம்.பி உதய் சீனிவாஸ் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க சென்னை வர இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதன்படி இன்றைய கூட்டத்தில் பங்கேற்க ஜனசேனா கட்சி எம்.பி உதய் சீனிவாஸ் நேற்று மாலையே சென்னை வந்தடைந்தார். அவருக்கு, சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பிக்கள் பி.வில்சன் மற்றும் கிரிராஜன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
ஆனால் இன்றைய கூட்டத்தில் ஜனசேனா கட்சி எம்.பி உதய் சீனிவாஸ் பங்கேற்காமல் தவிர்த்து விட்டார். பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனசேனா கட்சியை சேர்ந்த எம்.பி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்கும் கூட்டத்தில் பங்கேற்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜனசேனா கட்சி எம்.பி உதய் சீனிவாஸ் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதாக சென்னை வந்து சேர்ந்த உதய் சீனிவாஸ், திடீரென கூட்டத்தை புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. எனினும், கட்சித் தலைமை அறிவுறுத்தலின்படி, தான் கூட்டத்துக்கு வரவில்லை என திமுக எம்.பிக்களிடம் அவர் தெரிவித்து விட்டாராம்.
இதுதொடர்பாக ஜன சேனா கட்சித் தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் "தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அழைப்பு வந்தது... எங்களால் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தொகுதி மறுபங்கீடு தொடர்பாக சென்னையில் திமுக முன்னெடுப்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஜன சேனா கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் எங்களால் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்து விட்டோம். இந்தக் கூட்டத்தில் ஜனசேனா கலந்துகொள்வதாக வெளியான தகவல்கள் வெறும் யூகங்கள்தான். கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க சார்பில் வருமாறு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நாங்கள் வெவ்வேறு கூட்டணிகள் என்பதால் இந்தக் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை என்பதை பணிவுடன் தெரிவிக்கும்படி எங்கள் கட்சியின் தலைவர் பவன் கல்யாண் உத்தரவிட்டார். இதுதொடர்பாக தகவல் கொடுத்துள்ளோம். தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக எங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications