Jananaayagan vs Parasakthi: இது அண்ணன் - தம்பி பொங்கல்..திட்டமிட்டு வன்மத்தை பரப்புறாங்க! ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்
சென்னை: வரும் பொங்கலை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் பெரிய போட்டி உருவாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படமும், சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், பட வெளியீடு குறித்து சிவகார்த்திகேயன் எதுவும் பேசாமல் இருந்த நிலையில், தற்போது இரு பாடங்களும் நேருக்கு நேர் மோத யார் காரணம்? என்பது குறித்து சிவகார்த்திகேயனே விளக்கம் அளித்துள்ளார்.
அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் தவெக தலைவர் விஜய், கடைசித் திரைப்படமாக நடித்துள்ள படம் தான் 'ஜனநாயகன்'. போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். கேவிஎன் நிறுவனம் தயாரித்த இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
மறுபுறம், சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். 1950-60களின் பின்னணியில் உருவான இந்த படத்தில், மொழி தொடர்பான பிரச்சனைகள் கதை மையமாக இருக்கின்றன. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்த இந்த படம், முதலில் ஜனவரி 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஜனநாயகன் படம்
ஆனால், தற்போது தயாரிப்பு நிறுவனம் வெளியீட்டு தேதியை மாற்றி, படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால், ஜனவரி 9ஆம் தேதி 'ஜனநாயகன்'... அதற்கு அடுத்த நாளே 'பராசக்தி' ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வர உள்ளன. இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களும் இடைவெளியின்றி வெளியாக இருப்பதால், திரையரங்குகள் பங்கீடு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, விஜயின் கடைசி படமாக இருப்பதால், வசூலில் பெரிய அளவிலான தாக்கம் இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். அதேசமயம், சிவகார்த்திகேயனின் 25வது படமாக இருக்கும் 'பராசக்தி'க்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
பராசக்தி படம்
திரையுலக வட்டாரங்களின் தகவல்படி, இரண்டு படங்களுக்கும் தனித்தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால், இரண்டும் நல்ல வசூல் பெறும் வாய்ப்பு அதிகம். மேலும், விடுமுறை காலம் என்பதால், குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் மோதல் வெடித்தது. பராசக்தி படத்தை ஓட விடமாட்டோம் என சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
சிவகார்த்திகேயன் பேச்சு
இந்த நிலையில் இதுவரை இரு படங்களும் நேருக்கு நேர் மோதுவது குறித்து பேசாமல் இருந்த சிவகார்த்திகேயன் முதன் முறையாக அது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ள சிவகார்த்திகேயன்," படத்தை தொடங்கும் போது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உடன் பேசும் போது படத்தை எப்போது ரிலீஸ் செய்வோம் என கேட்டேன். அக்டோபரில் விஜய் சார் படம் வருகிறது. அதனால் நாம் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்யலாம் என்றார். பின்னர் தான் விஜய் சார் படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
விஜய் கடைசி படம்
உடனே நான் ஆகாஷ் பாஸ்கரனிடம் விஜய் சார் படம் பொங்கலுக்கு வருகிறது, அதனால் நம் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி விடலாமா என கேட்டேன். அதற்கு அவர் இனிமேல் இந்த படத்தை தள்ளிப் போட முடியாது. ஏப்ரல் மே மாதத்தில் தேர்தல் வந்துவிடும். நம் படத்தின் பிசினஸ் பொங்கலைச் சுற்றி உள்ளது. இதில் பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட முடியாது என்றார்.
பொங்கல் ரிலீஸ்
உடனடியாக நான் விஜய் சாரின் மேனேஜர் ஜெகதீஷிடம் பேசினேன். இதில் , "என்ன ப்ரோ இருக்கு" என அவர் சொன்னார். மேலும் "விஜய் சாரோட கடைசி படம்.. அவருக்கு ஓகேவா.. அப்படின்னு கேளுங்க" என்றேன். ஐந்து நிமிடம் என சொல்லிவிட்டு, "விஜய் சார் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல சொன்னார்" என்று சொன்னார்.
அண்ணன் - தம்பி பொங்கல்
பின்னர்," விஜய் சாரும் ஓகே" என சொல்லிவிட்டார் என்றார். பராசக்தி படத்தின் வெளியீடு குறித்து பலவிதமாக பேசி வருகிறார்கள். ஒரு சிலர் இதை வன்மத்துடனும், ஒரு சிலர் இதை வியாபாரத்திற்காகவும் தவறாக பரப்பி வருகிறார்கள். 33 வருஷம் நம்மளை எல்லோரையும் என்டர்டைன் பண்ண ஒருத்தரோட கடைசி படம். அதை செலிபிரேட் பண்ணனும். ஜனவரி 10ஆம் தேதி பராசக்தி வருது அதையும் செலபிரேட் பண்ணுங்க. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது அண்ணன் தம்பி பொங்கல்" என்றார்.












Click it and Unblock the Notifications