முதலமைச்சரின் துபாய் பயணம்! தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கும்! ஜவாஹிருல்லா நம்பிக்கை!
சென்னை: துபாய் பயணம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை அள்ளி வந்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் அமீரக பயணம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதிலும் பெரும் பங்காற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
4 நாள் அரசு முறை பயணம் நிறைவு! ஐக்கிய அமீரகத்தில் இருந்து நாடு திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்
அமீரகப் பயணம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24ஆம் தேதி அமீரக பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வெற்றிகரமான பயணமாக அமைந்துள்ளது. சுமார் 6100 கோடிக்கான முதலீடுகளைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளது. வெளிநாட்டிற்குச் சென்று தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை அள்ளிவரும் முதலமைச்சரின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்திற்கு பெருமை
இந்த அமீரக பயணம் தமிழ்நாட்டில் முதலீடு மட்டுமின்றி வேலைவாய்ப்பைப் பெருக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் பெரும் உதவியாக இருக்கும். துபாயில் நடைபெற்று வரும் உலக வர்த்தக கண்காட்சியில் ஒன்றிய அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ள அரங்கில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு என பிரத்தியேகமான அரங்கைத் துபாய் உலக வர்த்தக கண்காட்சியில் திறந்து வைத்துள்ளது வரவேற்பிற்குரியது. இது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ளது.
வேலைவாய்ப்பு பெருகும்
அதேபோல் உலகின் மிக உயரமான கோபுரமான புர்ஜ் கலிஃபாவில் தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றி சிறப்பான முறையில் காட்சிப்படுத்தியதை பார்த்தால் இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம் என உரைத்த முதலமைச்சரின் கூற்று நினைவுக்கு வருகிறது. மொத்தத்தில் முதலமைச்சரின் இந்த அமீரக பயணம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதிலும் பெரும் பங்காற்றும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
மாநிலத்தில் கடந்த ஆறு மாதங்களாக வெளிநாட்டு முதலீடு 41.5 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன. தொடர்ந்து நமது மாநிலம் மற்றும் மாநில மக்கள் மீது அக்கறை கொண்டு பணியாற்றிவரும் நமது முதலமைச்சரின் இந்த அமீரக பயணம் தொடர்பாக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் வைத்து வருகிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உள்நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் செய்துவரும் இதுபோன்ற விமர்சனத்தைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.