தமிழ்நாட்டிற்கு சம்பந்தமே இல்லாதவர் தமிழக அரசின் சட்ட மசோதாவை முடக்குவதா? ஜவாஹிருல்லா பாய்ச்சல்!
சென்னை: தமிழ்நாட்டிற்கே தொடர்பில்லாத ஒருவர் இங்கே உட்கார்ந்துக் கொண்டு தமிழக அரசின் திட்டங்களுக்கும், சட்டசபையில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது இந்திய ஜனநாயகத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என எச்சரித்துள்ளார் மமக தலைவர் ஜவாஹிருல்லா.
அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்து சட்டசபை சிறப்புக் கூட்டத் தொடரில் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார்.

சங்கரய்யாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு முடிவெடுத்து அதற்கான ஒப்புதல் கோரிய நிலையில், அவருக்கு டாக்டர் பட்டம் அளிக்க கடைசி வரை ஒப்புதல் கொடுக்காமல் பிடிவாதம் பிடித்தார் என்றால் அது சர்வாதிகாரப் போக்கே தவிர வேறு ஒன்றுமில்லை என மிக ஆவேசமாக பேசினார்.
அமைச்சரவையின் ஆலோசனைப்படித்தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என சட்டம் சொல்வதாகவும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர் ஆளுநர் ஆர்.என்.ரவி என்றும் அவருக்கும் தமிழ்நாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் பேசினார்.
அறிஞர் அண்ணா சொன்ன மாதிரி, "ஆட்டுக்கு தாடி, நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை" என்ற அந்த திசையை நோக்கி செல்லும் போதுதான் மத்திய அரசாங்கத்தினுடைய பிரதிநிதியாக இங்கே வரக்கூடிய அந்த சர்வாதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சட்டசபையில் ஜவாஹிருல்லா உரத்தக் குரலில் பேசினார்.
மொத்தத்தில் ஆளுநர் பதவியே இனி தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்றும் ஆளுநர் பதவிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதையும் சட்டசபை சிறப்புக் கூட்டத் தொடரில் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications