ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் மாற்றம்- முதல்வர் எடப்பாடியா? ஹெச் ராஜாவா? ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை: ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதற்கு மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எஸ்.பி.க்கள் இன்று இடம் மாற்றம் செய்யப்பட்டனர். ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் இடம் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றம் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ராமநாதபுரத்தில் இரு போதை பொருள் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதலில் நடைபெற்ற படுகொலையை நேர்மையான முறையில் விசாரித்த மாவட்ட எஸ்பி வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியா? ஹெச் ராஜாவா? இவ்வாறு ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

நவாஸ் கனி எம்.பி. கண்டனம்
இதேபோல் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனியும் வருண்குமார் இடம் மாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நவாஸ் கனி தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இரு தினங்களுக்கு முன்பு இராமநாதபுரத்தில் இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் நடைபெற்ற படுகொலையை, மத சாயம் பூசி, மத மோதலாக மாற்ற நடைபெற்ற முயற்சியை முறியடித்து, அதனை நேர்மையாக விசாரித்து 'நடைபெற்ற சம்பவம் மத ரீதியான பிரச்சனை இல்லை இருதரப்பினர்கிடையான பிரச்சினையே' என அறிக்கை வெளியிட்டு அமைதியை ஏற்படுத்தி நேர்மையுடன் செயல்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அரசு கொடுத்த பரிசு காத்திருப்போர் பட்டியல்.
இது துணிச்சலுடன், நேர்மையாக செயல்படும் அதிகாரிகள் மீதான அச்சுறுத்தல். இவ்வாறு நவாஸ் கனி கூறியுள்ளார்.

எஸ்டிபிஐ கண்டனம்
எஸ்.பி. வருண் குமார் இடம் மாற்றம் தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாக்வி தெரிவித்துள்ள கருத்து:
ராமநாதபுரத்தில் பாஜக "மதவெறிப்படுகொலை" என்று பொய்பரப்பிய போதை குழுக்கள் இடையேநடைபெற்ற படுகொலையை முறையாக விசாரித்து மதம்தொடர்பான படுகொலைஅல்ல எனஅறிக்கை வெளியிட்ட மாவட்ட எஸ்.பி. வருண்குமார் பணியிடமாற்றம்!
பாஜகவின் மதவெறிக்கு தமிழகஅரசு துணைபோவது முறையா!! இவ்வாறு தெஹ்லான் பாக்வி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications