தியாகமும்-தர்மமும் மனித சமுதாயத்தை உயர்த்தும்... ஜவாஹிருல்லா தியாகத் திருநாள் வாழ்த்து..!
சென்னை: தியாகமும் தர்மமும் தான் மனித சமுதாயத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தும் எனக் கூறி, இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.
கொரோனா பெருந்தொற்று விலகி விட்டது என்ற அலட்சிய மனநிலையில் இருக்காமல் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து இந்தப் பெருநாளை கொண்டாட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது;
''உலக மக்கள் அனைவரையும் நேர்வழி படுத்த தமது வாழ்க்கையில் இறையச்சத்துடனும் அர்ப்பணிப்போடும் களப்பணி செய்து வெற்றி பெற்ற இறைத்தூதர்களின் வரிசையில் நபி இப்ராஹீம் அவர்களின் வாழ்க்கை உன்னதமானது.
இப்ராஹிம் நபி மற்றும் அவர்களின் புதல்வர் இஸ்மாயீல் நபி ஆகியோரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தான் தியாகத் திருநாள் என்னும் ஹஜ் பெருநாளை உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பக்ரீத் என்றும் இது அழைக்கப்படும்.
தியாகத்தின் பெருமையை உலகிற்கு விளக்கும் உன்னதப் பெருநாள் தியாகத் திருநாள். உடல் பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மன ஓட்டத்தை அனைவரும் பெற்று வாழ்வியலை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் தியாகத் திருநாளின் அடிப்படை நோக்கம். தியாகமும் தர்மமும் மனித சமுதாயத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தும். மனிதர்கள் மீது காட்டப்படும் அன்பும் அக்கறையும் தான் உலகில் அமைதியையும் மகிழ்ச்சியையும் தழைத்தோங்க செய்யும்.
கடந்த ஆண்டு ரமலான் பெருநாள் மற்றும் தியாத்திருநாள். இந்த ஆண்டு ரமலான் பெருநாள் ஆகியவற்றை பெருந்தொற்று காரணமாக பள்ளிவாசல்களில் கொண்டாட முடியாத நிலை விலகி இவ்வாண்டு பள்ளிவாசலில் தியாகத் திருநாளை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் கொரோனா பெருந்தொற்று விலகி விட்டது என்ற அலட்சிய மனநிலையில் இருக்காமல் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து இந்தப் பெருநாளை கொண்டாட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்;
கொரோனா பெருந்தொற்றின் இன்னல்கள் மறைந்து உலகெங்கும் அமைதி சமாதானம் மனிதநேயம் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கிட இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். நன்றியும் கருணையும் உதவும் கொடை உள்ளமும் நம் மனங்களில் பெருகட்டும். அனைவருக்கும் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.''












Click it and Unblock the Notifications