ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு! தேர்வு கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை தேவை! மமக வலியுறுத்தல்!
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுத சென்ற இஸ்லாமிய மாணவிகளிடம் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்த தேர்வு கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
தமிழகம் சமூக நல்லிணக்கத்திற்கு முன் மாதிரி மாநிலம் எனக் கூறியுள்ள அவர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி சம்பந்தப்பட்ட ஆசிரியர் நடந்துகொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு எழுத முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தனர். தேர்வு மைய கண்காணிப்பாளராக பணியாற்றிய சரஸ்வதி என்பவர் மாணவர்களை தேர்வு அறைக்குள் செல்ல விடாமல் தடுத்ததோடு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கூடாது என்று கட்டளையிட்டுள்ளார்.

மன உளைச்சல்
இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் மன உளைச்சலுடன் ஹிஜாப் ஆடையை அகற்றி விட்டு சீருடையுடன் தேர்வு எழுதியுள்ளனர். இந்த தகவலை அறிந்த பெற்றோர்களும் தமுமுகவினரும் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்பு போராட்டம் நடத்தினர் போராட்டம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா ஆசிரியர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்களின் மத நம்பிக்கைகளில் தலையிட வேண்டாம் என்று அறிவுறுத்தியதோடு தேர்வு கண்காணிப்பாளராக செயல்பட்ட சரஸ்வதியை உடனடியாக வேறு பள்ளிக்கூடத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மத வெறுப்பு
அண்டை மாநிலமான கர்நாடகாவில் மதவெறுப்பு அரசியலின் பின்னணியில் ஹிஜாப் அணிய தடை விதித்ததன் காரணமாக பதட்டமான சூழ்நிலை உருவானது.

சமூக நல்லிணக்கம்
தமிழகம் சமூக நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியான மாநிலம். இங்கு பள்ளிக் கல்வி அமைச்சர் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை இல்லை என்று அறிவுறுத்தியும் பல்வேறு முதன்மை கல்வி அலுவலர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹிஜாப் அணிந்து வர தமிழகத்தில் எந்தவித தடையுமில்லை என்று பதிலளித்தும் இருக்கின்றனர். அரசின் வழிகாட்டுதலை பின்பற்றாமல் மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய அந்த ஆசிரியரின் மீது பணியிட மாற்றம் எனும் நிலையை கடந்து துறைரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications