5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள்! அரசுக்கு நன்றியும் பாராட்டும்! மமக வரவேற்பு!
சென்னை: 5 மாவட்டங்களில் புதிதாக சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்கும் அரசின் நடவடிக்கைக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற நடவடிக்கையால் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு கிடைக்கக்கூடிய அரசு உதவிகள் நேரடியாகவும் இலகுவாகவும் கிடைக்க வழிவகை செய்யும் எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சிறுபான்மையினர் நலன்
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மை அலுவலகங்களை அமைக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி உட்பட சிறுபான்மை அமைப்புகள் கோரி வந்தன.இந்நிலையில் சட்டசபையில், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

5 மாவட்டங்கள்
அதன் அடிப்படையில் சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலகங்கள் அமைக்கப்படுகின்றன என்றும், அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை சிறுபான்மையினர் முஸ்லிம்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நன்றி -பாராட்டு
தமிழக அரசின் இதுபோன்ற நடவடிக்கையால் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு கிடைக்கக்கூடிய அரசு உதவிகள் நேரடியாகவும் இலகுவாகவும் கிடைக்க வழிவகை செய்யும். இந்த திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்தக் கட்டம்
இதனிடையே அடுத்தகட்டமாக திருச்சி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களிலும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என சிறுபான்மையினர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications