நிலவில் இந்தியா! சாதனைகளுக்கு விதை தூவிய ஜவஹர்லால் நேரு! இஸ்ரோவை தொடங்கியது அவர் தான்! -ஜவாஹிருல்லா
சென்னை: சந்திரயான் 3 விண்கலம் மூலம் இந்தியா சரித்திர சாதனை புரிந்திருக்கும் நிலையில் அதற்கான விதையை போட்டவர் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவை தொடங்கியது நேரு தான் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இஸ்ரோ அறிவியலாளர்கள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நமது நாடு இந்தியா சந்திரயான் 3 விண்கலம் மூலம் சாதித்துள்ளது. நமக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது.
நிலாவைத் தொட சந்திரயான் திட்டம் மூலம் எடுக்கப்பட்ட மூன்று முயற்சிகளிலும் முத்திரைப் பதித்த திட்டத்தின் இயக்குநர்களாக மயில்சாமி அண்ணாதுரை, வனிதா முத்தையா மற்றும் வீர முத்துவேல் ஆகிய தமிழர்கள் செயலாற்றியிருப்பது கூடுதல் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கின்றது.
மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ள இஸ்ரோ அறிவியலாளர்கள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து இந்தியர்களுக்கும் இது ஒரு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்வாகும்.
இந்தச் சாதனைகளுக்கு விதை போட்டவர் தொலைநோக்கோடு இஸ்ரோவைத் தொடங்கிய நமது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்பதை நெகிழ்வோடு இவ்வேளையில் நினைவு கூர்கிறேன். இத்தகைய வானலாவிய இந்தியச் சாதனை வரலாறு மேலும் தொடர நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.''












Click it and Unblock the Notifications