சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாப்பு! குரல் கொடுத்த நல் உள்ளங்களுக்கு நன்றி! ஜவாஹிருல்லா நெகிழ்ச்சி!
சென்னை: சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல் கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.
தமிழ்நாடு என்றென்றும் மதசார்பின்மைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் முன்மாதிரி மாநிலம் என்பது நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கர்நாடக கல்லூரி மாணவி முஸ்கானுக்கு 'பாத்திமா ஷேக்' விருது! ஜவாஹிருல்லா அறிவிப்பு!
அனைத்துக் கட்சிகள்
மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி வளாகத்திற்குள் செல்லும் உரிமையை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பாசிச பாஜக அரசிற்கும் சங்பரிவார கும்பல்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஆதரவு குரல்
இந்தியா முழுவதிலிருந்தும் குறிப்பாக தமிழகத்திலிருந்து கவிஞர்கள், எழுத்தாளர்கள், இதழியலாளர்கள், ஓவியர்கள்,கல்வியாளர்கள்,திரைப்படக் கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் என்று பலதரப்பட்டவர்களும் சங்கிகளால் ஒடுக்கப்படும் முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
மதச்சார்பின்மை
தமிழ்நாடு என்றென்றும் மதசார்பின்மைக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் முன்மாதிரி மாநிலம் என்பதற்கு உதாரணமாக இந்து சமயச் சான்றோர்களும் கிறிஸ்தவ சகோதரர்களும் அவர்களுடைய பெண் குழந்தைகளுக்கு ஹிஜாப் அணிவித்து சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு ஆதரவு தெரிவிக்கும் சூழல் அதிகரித்து வருவதை காணமுடிகிறது.
நன்றிக்கடன்
அரசியல் சட்டம் வழங்கியுள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கும் அத்துணை நல் உள்ளங்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது நன்றிக்கடனை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனிடையே அன்புமணி ராமதாஸ், தனியரசு, கருணாஸ், ஜோதிமணி எம்.பி. உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் ஹிஜாபுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.