மாணவிகளுக்கு தொல்லைகள்; சும்மா விட்டால் சரிப்படாது; இரும்புக்கரத்தால் அரசு ஒடுக்கணும் -ஜவாஹிருல்லா
சென்னை: பள்ளிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளை தடுக்க அரசு இரும்புக்கரம் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் குழந்தை பாதுகாப்பு கொள்கை உருவாக்கப்பட்டு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சக மாணவிகள்
கோவை மாநகரம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த மாணவி, பள்ளி ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர், இம்மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார். இதை, சக மாணவிகளிடம் கூறி, மாணவி கதறி அழுதுள்ளார்.

தலைமை ஆசிரியர்
இந்த விவகாரம் வெளியே தெரியக்கூடாது என ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பள்ளி தலைமையாசிரியர் மீரா ஜாக்சனிடம் புகார் செய்தபோது அவர் ஆசிரியரை கண்டிப்பதற்குப் பதில் மாணவியைக் கண்டித்துள்ளனர். இதில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரிய வருகிறது.

அரசு முன்வர வேண்டும்
தமிழகத்தில் தனியார்ப் பள்ளிகளில் நடத்தப்படும் குழந்தைகள் எதிராக நடத்தப்படும் அத்துமீறல்கள் பெரும்பாலும் வெளிவருவதில்லை. தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தாக்குதல் குறித்து புகார் அளிக்கச் சுதந்திரமாக செயல்படும் குழுக்களை மாவட்டம் தோறும் நியமிக்கத் தமிழக அரசு முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

விசாரணை குழு
கோவை சின்மயா வித்யாலயா பள்ளி மாணவி பள்ளிக்கூட தலைமை ஆசிரியரிடம் அளித்த புகாரை அவர் உதாசீனப்படுத்தியதுடன் மாணவியைக் கண்டித்தும் உள்ளார். இத்தகைய சூழல்களை தவிர்ப்பதற்குத் தான் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த குழுவில் அந்த பகுதியைச் சேர்ந்த குழந்தை உரிமைகள் குறித்த புலமையுடைய சமூக ஆர்வலர்களும் இடம் பெற வேண்டும் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இரும்புக்கரம்
இந்த விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம். இத்தகைய விசாரணைக் குழுக்களைத் தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் அமைத்திட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க இரும்புக்கரத்துடன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications