சுவாமிமலை கோயிலில் மின் தூக்கி வசதி! முருக பக்தர்கள் சார்பில் முதலமைச்சருக்கு ஜவாஹிருல்லா நன்றி!
சென்னை: முருகனின் அறுபடை வீடுகளில் 4ஆம் படை வீடான சுவாமி மலையில் மின் தூக்கி வசதி செய்து கொடுத்தமைக்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முருக பக்தர்கள் சார்பில் நன்றி கூறிக்கொள்வதாக சட்டசபையில் பேசியிருக்கிறார் ஜவாஹிருல்லா.
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பேசிய தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவருமான ஜவாஹிருல்லா, சுவாமி மலை கோயிலுக்கு மின் தூக்கி வசதி செய்து கொடுக்க வேண்டும் என ஏற்கனவே தாம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அதனை இப்போது அரசு நிறைவேற்றிக் கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக சுவாமி மலை கோயில் திகழ்வதாகவும் அங்கு வரும் பக்தர்கள் வசதிக்காக மின் தூக்கி அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

முருக பக்தர்கள் அனைவரது சார்பிலும் இந்த நன்றியை தெரிவிப்பதாக குறிப்பிட்டுக் கூறினார். அதேபோல் தனது தொகுதிக்குட்பட்ட வெள்ளை விநாயகர் கோயில் தேர் மண்டபத்தை சீரமைத்துக் கொடுக்குமாறும் சட்டசபையில் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஜவாஹிருல்லா கோரிக்கையை ஏற்று வெள்ளை விநாயகர் கோயில் தேர் மண்டபத்தை சீரமைக்க ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் ஆட்சி இந்த தமிழாட்சி எனத் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை மூலம் 400க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள், திருத்தேர்களை பழுதுபார்த்து வீதி உலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதையும் அவர் சுட்டிகாட்டினார்.
திமுக ஆட்சியில் இந்து விரோதப் போக்கு கடைபிடிக்கப் படுவதாக சிலர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அதனை தவிடுபொடியாக்கும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பு, சட்டசபை என எல்லா இடங்களிலும் புள்ளி விவரங்களை அடுக்கி வருகிறார் அமைச்சர் சேகர் பாபு. இதனிடையே சுவாமி மலை கோயிலுக்காகவும், வெள்ளை விநாயகர் கோயில் தேர் மண்டபத்திற்காகவும் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பி பேசிய போது, அவையில் இருந்த உறுப்பினர்களின் முகத்தில் புன் முறுவலை பார்க்க முடிந்தது.
இஸ்லாமியராக இருப்பினும் தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த மக்களுக்காக கோயில் விவகாரத்தை சட்டசபையில் உரக்க பேசி கவனம் ஈர்த்திருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.












Click it and Unblock the Notifications