நான் ஓடெல்லாம் மாட்டேன்.. வர்றேனு தானே சொல்றேன்.. போலீசாரிடம் மன்றாடிய ஜெயக்குமார்
சென்னை: நான் ஓட மாட்டேன், நானே வர்றேன், என்னை விடுங்க என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட போது போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார்.
கடந்த 19ஆம் தேதி நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில தாக்கத் தொடங்கினர்.
அப்போது அந்த நபரை அடிக்க வேண்டாம் என கூறிய ஜெயக்குமார், அவரது கையை கட்டும்படி கூறி அவரை சட்டையின்றி சாலையில் அழைத்து சென்று காவல நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோ வைரலானது.

ஜெயக்குமார்
ஜெயக்குமாரால் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நபர் திமுகவை சேர்ந்தவர், அவரது பெயர் நரேஷ். இது தொடர்பாக நரேஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தாக்குதல், கலகம் செய்ய தூண்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதே போல் ஜெயக்குமாரின் கார் ஓட்டுநர் ஜெகன்நாதன் அளித்த புகாரின் பேரில் திமுக தரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சென்னை பட்டினம்பாக்கம்
இதையடுத்து சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த கைதின் போது போலீஸாருக்கும் ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதை வீடியோவாக எடுத்து ஜெயவர்த்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ஜெயக்குமார் மாற்று உடை
அதில் ஜெயக்குமார் மாற்று உடை அணிந்து வருவதாக சொல்கிறார். அதை ஏற்காத போலீஸார் அவரை லுங்கியுடனேயே வர சொல்கிறார்கள். அப்போது ஜெயக்குமார், நான் ஓடெல்லாம் மாட்டேன், வர்றேனுதானே சொல்றேன். நீங்க அவசரப்பட்றீங்களே என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் பொறுமையாக வாக்குவாதம் செய்தார்.

ஒருத்தரை பிடிக்க இத்தனை போலீஸா
இதுகுறித்து ஜெயக்குமாரின் மனைவி கூறுகையில், ஒருவரை பிடிக்க வீட்டிற்குள்ளேயே 20 போலீஸார் வந்துவிட்டார்கள. வெளியே போய் பார்த்தால் அத்தனை பேர் நிற்கிறார்கள். ஒருவரை பிடிக்க இத்தனை போலீஸாரா வருவார்கள்? கள்ள ஓட்டு போட்டவரை பிடித்து கொடுத்தது ஒரு தவறா? என்றும் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications