மு.க.அழகிரி- உதயநிதி சந்திப்பு.. குடும்ப பாசம்தான்! ஆனால் முட்டி மோதி வீதிக்கு வரும்.. ஜெயக்குமார்
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் தனது பெரியப்பா மு.க. அழகிரியை சந்தித்தது குடும்பப் பாசம்தான். எனினும் முட்டி மோதி வீதிக்கு வரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. இவர் மத்திய அமைச்சராக இருந்தார். இந்த நிலையில் கட்சியில் தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கட்சியிலிருந்து 2014 ஆம் ஆண்டு நீக்கப்பட்டார்.
இதையடுத்து அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்த்து கொள்ள குடும்ப உறுப்பினர்கள் பலர் கருணாநிதியிடம் தூது போயும் அவர் சேர்க்க மறுத்துவிட்டார். கிட்டதட்ட 9 ஆண்டுகள் ஆன நிலையில் அழகிரி வெளியே வந்தாலே செய்தியாளர்கள் கேட்கும் கேள்வி "சார் திமுகவில் எப்போது இணைவீர்கள்" என்பதுதான்!

கருணாநிதி மறைவு
கருணாநிதி மறைந்தவுடன் அண்ணனும் தம்பி ஸ்டாலினும் எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான சாதகமான விஷயங்கள் அண்மைக்காலமாக நடந்து வருகின்றன. அந்த வகையில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் மு.க.அழகிரி ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்ததுடன் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பின்பேரில் தனது மகன் துரை அழகிரியையும் மகள் கயல்விழியையும் அனுப்பியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
இதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் எப்போது மதுரை போனாலும் அவர் மு.க.அழகிரியின் வீட்டிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று முன் தினம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா மு.க.அழகிரியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு பெரியப்பா, பெரியம்மா காந்தி ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

அழகிரியின் முகத்தில் பேரானந்தம்
தனது தம்பி மகன் தன் வீட்டிற்கு வந்ததால் அழகிரியின் முகத்தில் பேரானந்தமாக இருந்தது. இரு குடும்பமும் விரைவில் ஒன்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது போல் துரை அழகிரிக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கப்படும் என்றும் அவரும் அவரது தந்தையும் விரைவில் திமுகவில் இணைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அழகிரி- உதயநிதி சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

106 ஆவது பிறந்தநாள்
முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் 106 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சசிகலா ஆயிரம் கருத்துகளை சொல்லலாம். அதையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.

முட்டி மோதும்
டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸுடன் இணைந்து சசிகலா தனி கட்சியை தொடங்கட்டும். அதிமுகவில் மூக்கை நுழைக்க வேண்டாம். அதிமுக விவகாரத்தில் தேவையில்லாத கருத்துகளை சசிகலா கூற வேண்டாம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் எழுதியதால்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தோம். அழகிரியை உதயநிதி சந்திதத்து குடும்பப் பாசம்தான். ஆனால் இது பின்னாளில் முட்டி மோதி வீதிக்கு வரும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications