சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவலாமா? விவசாயிகளை அவமதித்துவிட்டார் ஸ்டாலின் .. ஜெயக்குமார் தாக்கு
சென்னை: காலை சிற்றுண்டி திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவி விவசாயிகளை அவமானப்படுத்திவிட்டார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அண்ணாசாலையில் அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிலச்சுவான்தர்கள்தான் அரசியலில் கோலோச்சுகின்ற நிலைமை. ஆனால் பாமரன்கூட அரசியலில் வந்து மக்களுக்குத் தொண்டாற்ற முடியும் என்ற அந்த நிலையை எடுத்து, தன்னுடைய அறிவாற்றலால், அவர் ஒரு பன்முக தன்மை கொண்டவர்.

அண்ணாவின் சொற்பொழிவுகள்
அண்ணாவின் சொற்பொழிவுகள் எல்லாம் நம்முடைய காதுகளுக்கு இனிமையும், அதனைக் கேட்டாலே உணர்ச்சி பொங்குகின்ற ஒரு சொற்பொழிவைத்தான் அண்ணா நிகழ்த்தினார். அண்ணா அரசியலில் என்றைக்குமே நாகரிகத்தை கடைப்பிடித்தவர். அண்ணாவை ஒருமையிலும்,அவருடைய பிறப்பைப் பற்றியும்கூட காஞ்சிபுரத்தில் அன்றைக்கு இருந்த காங்கிரஸ்காரர்கள் ஒரு சுவற்றிலே அண்ணா பற்றித் தரக்குறைவான வார்த்தைகள் சொல்லியபோது அண்ணாவின் தம்பிகள் வெகுண்டு எழுந்தார்கள்.

தம்பிகளின் உணர்வுகளுக்கு மதிப்பு
அவர்களை அண்ணா அமைதிப்படுத்தி, தம்பிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் தம்பிகள் செய்யவேண்டிய ஒரு காரியம், என்னைப்பற்றி அன்றைக்குக் காங்கிரஸ்காரர்கள் சுவற்றில் எழுதி வைத்ததை எல்லோரும் படிக்கும் வகையில் ஒரு மெழுகுவர்த்தி அல்லது வெளிச்சம் தருகின்ற விளக்கை ஏற்றுங்கள்.

அண்ணா வழியில்!
எல்லோரும் படித்துவிட்டுச் செல்வார்கள் என்ற பண்பாட்டை அண்ணா வளர்த்தார். ஆனால் அண்ணா வழியிலே நாங்கள் ஆட்சி செய்கிறோம் என்று சொல்லி இன்றைய விடியா திமுக அரசில் ஒரு பண்பாடு கிடையாது. அரசியல் நாகரீகம் கிடையாது. அதற்கு மாறாக எதிர்க்கட்சிகளை ஒடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகளைப் புழுதிவாரி தூற்ற வேண்டும்,என்ற அந்த நாகரீகமற்ற அரசியலை இன்றைக்குத் திமுக எடுத்துச் செல்கிறது.

ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு
அண்ணாவின் வழியில் நாங்கள் வந்தவர்கள் என்று சொல்வதற்கு திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது என கூறிய ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்வி பதிலுக்கு பதில் அளித்தார்.
கேள்வி : நரிக்குறவர்களைப் பட்டியலினத்தில் சேர்க்கப்பட்டதற்கு திமுகதான் காரணம் என்று சொல்லிவருகிறார்களே?

பொய் பிம்பம்
பதில் : கோயல் பல்ஸ் பிரச்சாரம்போல ஏதோ இவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி பட்டியலினத்தில் சேர்த்தது போல ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள். இது தவறு. முதல் முதலாக சட்டமன்றத்தில் தீர்மானத்தை இயற்றி மத்திய அரசுக்குக் குரல் கொடுத்தவர் புரட்சித் தலைவி அம்மா. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று மத்திய அரசு நரிக்குறவ இன மக்களை பட்டியலினத்தில் சேர்த்துள்ளது. இதேபோல மீனவர்களும் கடலில் வேட்டையாடுகின்ற செயலைதான் செய்துவருகிறார்கள். மீன் ஒரு இடத்தில் நிலையாக இருப்பது கிடையாது. அதன் வேகத்தில் காட்டில் எப்படி வேட்டையாடுகிறார்களே அதுபோல கடலில் வேட்டையாடும் இனம்தான் மீனவ இனம். இந்த மீனவ இனத்தையும் பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும் என்று எங்கள் ஆட்சிக் காலத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து அழுத்தங்களும் அளிக்கப்பட்டுவிட்டது. இந்த விடியா அரசு இதைப்பற்றி எதுவும் பேசவில்லை. நாளைக்கு மீனவர்களையும் பட்டியலினத்தில் சேர்க்கும்போது அதற்கு நாங்கள்தான் காரணம் என்று அதனையும் சொல்வார்கள்.

சிற்றுண்டி திட்டம்
கேள்வி : அண்ணா பிறந்தநாளான இன்று காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். காமராஜர்,எம்ஜியாருக்கு பிறகு நாங்கள்தான் இந்த திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளோம் என்று சொல்கிறார்களே
பதில் : கம்பி கட்டும் வேலையை நன்றாகச் செய்கிறார்கள். இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் உருப்படியான திட்டத்தைச் செயல்படுத்துவது கிடையாது. ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து பெயர் சூட்டுவிழாவை மட்டும் பிரமாதமாக இருக்கும். ஏன் என்றால் முதல்வரின் பக்கத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு இருக்கிறார். நான் அமைச்சராக இருந்தபோது எனக்கு துறை செயலாளராக இருந்துள்ளார்.அவர் கைவண்ணம் எல்லாம் எனக்குத் தெரியும். அவர் எழுதித் தருவதை இவர் ( முதல்வர் ) படிப்பார். திட்டத்தைத் துவக்கி வைத்த முதல்வருக்கு புதிய எவர்சில்வர் பிளேட். புதிய ஸ்பூன் அனைத்தும் அளித்தார்கள். சாப்பாடு போட்டவுடன் அதனை முழுமையாகச் சாப்பிடவேண்டும் அல்லவா. இரண்டுவாய்தான் எடுத்து வைத்திருப்பார்.அதற்குள் அந்த தட்டிலையே கையை கழுவிவிட்டார். முதலமைச்சர் ஆரமித்த திட்டத்தையே முதலமைச்சரே அவமானப்படுத்துகின்ற நிலை உள்ளது. விவசாயிகள் கஷ்டப்பட்டு அந்த பொருளை உற்பத்தி செய்கிறார்கள். அந்த தட்டிலையே கை கழுவுகிறது என்பது ஊடகங்களில் பரவியுள்ளது. ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து பெயர் வைக்கும் பணியைத்தான் செய்துவருகிறார்களே தவிர எந்த ஒரு ஆக்கப்பூர்வமான பணியையும் செய்யவில்லை.

பழைய பென்ஷன் திட்டம்
தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதி என்ன ஆனது. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் என்ன ஆனது. அரசு ஊழியர்களுக்குப் பழைய பென்ஷன் திட்டம் என்ன ஆனது. அரசு ஊழியர்கள் மாநாடு போட்டார்கள். எந்த அறிவிப்பு இல்லை.அவர்கள் புறக்கணித்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் முடித்துவிடுவோம் என்றார்கள். அந்த சூட்சமம் எங்களுக்குத்தான் தெரியும் என்றார்கள். மசோதாவைப் போட்டு 180 நாட்கள் ஆகிவிட்டது.அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வாங்க இந்த அரசுக்கு வக்கில்லை.துப்பில்லை என ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications