"ஆலமரம்".. அங்கே இருக்கிறதே வெறும் 4 பேர்தான்.. சசிகலா பேச்சுக்கு ஜெயக்குமார் பதில்
சென்னை: சசிகலாவுக்கு எப்போதுமே அதிமுகவில் இடம் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது என ஒரு சாராரும் , சேர்க்கக் கூடாது என மறுசாராரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சசிகலாவும் அதிமுகவிற்கு விரைவில் தலைமையேற்பேன் என கூறி வருகிறார்.
இது இவ்வாறிருக்க சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொண்டால் , அக்கட்சி இன்னும் வலுவாக இருக்கும். சசிகலா பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.

ஜெயக்குமார்
இதுகுறித்து ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், சசிகலாவை எப்போதுமே அதிமுகவில் சேர்க்க மாட்டோம். இதுதான் எங்களுடைய நிரந்தர நிலைப்பாடாகும். பணத்தை வைத்து அரசியல் செய்யலாம் என சசிகலா நினைக்கிறார். சசிகலா விரும்பினால் பாஜகவில் சேரட்டும்.

அதிமுக கொடி
அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமமுகவில் 4 பேர் மட்டுமே உள்ளனர். மற்ற அனைவருமே அதிமுகவுக்கு வந்துவிட்டனர் என்றார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுகவின் சிவி சண்முகத்தின் தீவிர விசுவாசியான முகமது ஷெரீப் தற்போது சசிகலா ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.

திருமண விழா
இந்த நிலையில் அவரது மகள் திருமண விழா சசிகலா முன்னிலையில் நடைபெற்றது. அந்த விழாவில் சசிகலா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் சசிகலா பேசுகையில் ஒரு மிகப் பெரிய ஆலமரம் இதில் எத்தனையோ கோடிக்கணக்கான பறவைகள் தஞ்சமடைந்து வந்துள்ளன.

வயிறு நிறைந்தால் போதும்
ஒரு சில பறவைகள் தன் வயிறு நிறைந்தால் போதும் என்ற சுயநலத்துடன் இருக்கும். அவைகளால் கூட இருக்கும் மற்ற பறவைகளுக்கும் மரத்திற்கும் எந்தவிதமான பயனும் ஏற்படாது. அதே சமயத்தில் வேறு சில பறவைகள் இருக்கும் இடமே தெரியாது. ஆனால் தன்னோடு இருக்கும் மற்ற பறவைகளை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் ஆலமரத்தில் அடைந்த பயன்களை நன்றியோடு நினைத்து மரத்திற்கும் பாதுகாப்பாக விளங்கும்.

வாழ்நாள் அர்ப்பணிப்பு
அது போன்ற ஆலமரமாக விளங்கும் இந்த இயக்கம் அழிந்துவிடாமல் துணை நிற்கும். உங்களை போன்ற உண்மையான தொண்டர்களை காப்பாற்றுவதற்கு என் எஞ்சியுள்ள வாழ்நாளை முழுவதுமாக அர்ப்பணிக்கிறேன் என சசிகலா தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications