தென் சென்னையில் களமிறங்கும் ஜெயக்குமார் மகன்! நிவாரணப் பணிகளில் ஜெயவர்தன் மும்முரம் காட்டிய பின்னணி!
சென்னை: வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் மீண்டும் தனது மகன் ஜெயவர்தனை களமிறக்க முடிவெடுத்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதற்கான களப்பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தான் மிக் ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை சந்திக்கவும், அரசு மீதான மக்களின் கோபத்தை தனக்கான வாக்குகளாக அறுவடை செய்யவும் ஜெயவர்தன் சுற்றிச் சுழன்று வருகிறார். வரும் தேர்தலில் தென் சென்னையில் போட்டியிட்டு எப்படியாவது வெற்றி பெற்று டெல்லி சென்றுவிட வேண்டும் என்பதில் ஜெயவர்தன் மிகவும் உறுதியாக உள்ளார். அதற்கேற்றவாறு மெல்ல மெல்ல காய் நகர்த்தி வந்தார்.

இந்நிலையில் அண்மையில் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தால் மக்கள் ஆளும் திமுக அரசு மீது கோபத்தில் இருக்கிறார்கள். இந்தக் கோபத்தை அதிமுகவுக்கு சாதகமாக திருப்பும் வகையில் நிவாரணப் பணிகளிலும் இப்போது தீவிரம் காட்டி வருகிறார் ஜெயவர்தன். இவரை பொறுத்தவரை கடந்த 2014 முதல் 2019 வரை தென் சென்னை தொகுதி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ஆம் தேர்தலில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் தோல்வியை தழுவினார் ஜெயவர்தன். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த இவர் இப்போது மீண்டும் ஆக்டிவ் பாலிடிக்ஸ்க்கு திரும்பியிருக்கிறார். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குள் தான் வருகின்றன. இதனால் தனது மகனின் வெற்றி எளிதாகும் எனக் கணக்குப் போட்டு அதற்கேற்றவாறு காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டார் ஜெயக்குமார்.

இதனிடையே ஜெயவர்தனுக்கு போட்டியாக இன்னும் ஒரு சில முக்கிய பிரமுகர்களும் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட ஆர்வம் காட்டி, சீட்டுக்காக எடப்பாடி பழனிசாமியை சுற்றிச் சுற்றி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications