சிங்கம் இல்லாத காடு... ஜெயலலிதா இல்லாத அதிமுக- போயஸ் கார்டன் பூங்குன்றன்
சென்னை: சிங்கம் இல்லாத காட்டை போல், ஜெயலலிதா இல்லாத அதிமுக உள்ளது என போயஸ் கார்டன் பூங்குன்றன் கருத்து பதிவிட்டுள்ளார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அவரது உதவியாளராக போயஸ் கார்டனில் பணியாற்றியவர் தான் இந்த பூங்குன்றன். ஜெயலலிதாவின் கடைசி காலம் வரை அவரது நன்மதிப்பை பெற்ற நபர்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில், ஜெயலலிதா இருந்தபோது நடைபெற்ற பொதுக்குழு பற்றிய சுவராஸ்யமான சில நிகழ்வுகளை அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

பிரமிக்க வைக்கும்
அதிமுக பொதுக்குழு அறிவிக்கப்பட்டவுடன் தீர்மானம் எழுத குழு அமைக்கப்பட்டு, தீர்மானத்திற்கான குறிப்புகளை அந்தக் குழு தன்னிடம் வழங்கும் எனக் கூறியுள்ளார். அதை தொகுத்து ஜெயலலிதாவிடம் வழங்கும் போது தனக்கும், தீர்மானம் எழுதிய குழுவிற்கும் பயம் தொற்றிக்கொள்ளும் எனவும், ஒன்றுவிடாமல் அவர் படித்து பார்த்து தவறுகளை சுட்டிக்காட்டுவார் என்றும் கூறியுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் நினைவாற்றல் தங்களை பிரமிக்க வைக்கும் என்றும் பூங்குன்றம் தெரிவித்துள்ளார்.

ஆச்சரியம்
மேலும், பொதுகுழுவுக்கான மண்டபத்தை முன் பதிவு செய்வது, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான உணவு மெனுவை தயார் செய்வது, நிகழ்ச்சி நிரல் என அனைத்தையும் பார்த்து பார்த்து அவரே முழு அக்கறையுடன் செய்வது பார்ப்போரை வியக்க வைக்கும் எனக் கூறியுள்ளார்.

உணவுக்கு கவனம்
பொதுக்குழுவுக்கு வரும் வெளிமாவட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும், மன நிறைவோடு சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும் என நினைத்தவர் ஜெயலலிதா என்றும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் மதிய உணவுக்காக அவர் எழுதி தரும் மெனுவை பார்த்தால் மலைப்பு ஏற்பட்டு விடும் எனத் தெரிவித்துள்ளார் பூங்குன்றன்.

விசாரணை
பொதுக்குழு அறிவிக்கப்பட்ட நாள் முதல் அது நடைபெற்று முடியும் வரை தனக்கு இதயத்துடிப்பு அதிகரித்து விடும் எனக் கூறியிருக்கிறார் பூங்குன்றன். மேலும், பொதுக்குழுவுக்கு வெளியூரில் இருந்து சென்னை வரும் உறுப்பினர்கள் பாதுகாப்பாக ஊர் போய் சேர வேண்டும் என நினைத்தவர் ஜெயலலிதா எனவும், வீட்டிற்கு வந்தாலும் இண்டர்காம் மூலம் அழைத்து இது தொடர்பாக தன்னிடம் விசாரித்துக்கொள்வார் என்றும் பூங்குன்றன் தனது நினைவலைகளை முகநூலில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications