2016-17 வருமானவரித்துறை கணக்குப்படி ஜெ.,விற்கு வங்கியில் ரூ.10 கோடி இருப்பு..ஐகோர்ட்டில் தகவல்
சென்னை: முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான, போயஸ் தோட்ட வீடு, ஐதராபாத் வீடு உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.900 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகி ஒருவரை நியமிக்க கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு விசாரணையின் போது அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது வருமான வரித்துறை.

அந்த அறிக்கையில் 2016-17-ம் ஆண்டிற்கான வருமானவரித்துறை கணக்கின்படி, ஜெயலலிதாவுக்கு ரூ16.37 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 2016-17-ம் ஆண்டிற்கான வருமானவரித்துறை கணக்குப்படி ஜெயலலிதாவிற்கு வங்கியில் ரூ.10 கோடி இருப்பு உள்ளது.
மேலும் 1990-91 முதல் 2011-12 வரை ஜெயலலிதாவுக்கு ரூ10.12 கோடி வரி பாக்கி உள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதே போல 2005-06 முதல் 2011-12 வரை ரூ.6.62 கோடி ஜெயலலிதாவுக்கு வருமான வரி பாக்கி உள்ளதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.
ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் குறித்து, வருமான வரித்துறை துணை ஆணையர் ஷோபா உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி மேற்கண்ட விவரங்களை அறிக்கையாக அளித்துள்ளார்.
வருமானவரித்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.900 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கை வரும் ஜுன் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications