ஜெயலலிதா மரண வழக்கு: ஆறுமுக சாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணர் குழு அமைப்பு: உச்ச நீதிமன்றம்
ஆறுமுக சாமி ஆணையத்தை எதிர்த்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், ஆறுமுக சாமி ஆணையத்துக்கு விசாரணைக்கு உதவ மருத்துவ நிபுணர் குழுவை அமைப்போம் எனத் தெரிவித்துள்ளது.
ஒருதலைப்பட்சமான ஆறுமுக சாமி ஆணையம்..அப்போலோ நிர்வாகம் வழக்கு
ஆறுமுகசாமி ஆணைய விசாரணை கமிஷனில் முறையான மருத்துவ நிபுணர்கள் இல்லை, அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் குறித்த மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்ய நிபுணத்துவம் பெற்றவர்கள் தேவை, தங்கள் நற்பெயருக்கு ங்கம் விளைவிக்கும் வகையில் விசாரணை ஆணைய நடைமுறைகள் உள்ளதால் விசாரணைக்கு தடைகோரிய அப்பல்லோ நிர்வாகத்தின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. நீதிபதி நசீர் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
ஆணையத்தை தடை செய்ய தமிழக அரசு எதிர்ப்பு
தங்கள் நற்பெயருக்கு ங்கம் விளைவிக்கும் வகையில் விசாரணை ஆணைய நடைமுறைகள் உள்ளதால் ஆணையத்தை முழுதுமாக தடை கோரிய அப்போலோ வழக்கில் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தில் மாற்றங்கள் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. வழக்கு தொடர அப்போலோவுக்கு உரிமை இல்லை, மருத்துவ நிபுணர்களை சேர்க்க கோரினால் அதை செய்யலாம், ஒட்டுமொத்த ஆணையம் குறித்து அப்போலோ முடிவெடுக்க முடியாது என தமிழக அரசுத்தரப்பு பதிலில் தெரிவித்திருந்தது.
புதிய ஆணையம் இல்லை தமிழக அரசு திட்டவட்டம்
ஆறுமுக சாமி ஆணையத்துக்கு மாற்றாக புதிய ஆணையம் எதுவும் அமைக்கும் எண்ணமில்லை, கூடுதல் நீதிபதிகளை இணைக்கும் எண்ணமும் இல்லை என தமிழக அரசு திட்டவட்டமாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதன் மூலம் ஆறுமுக சாமி ஆணையமே தொடரும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது.
மருத்துவ நிபுணர் குழு மட்டுமே உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
ஆறுமுகசாமி ஆணைய வழக்கு விசாரணை தொடங்கியது. அப்போது பேசிய தமிழக அரசு அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கூடுதல் இட வசதி கொண்ட இடம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "ஒரு டைனிங் மேஜை கொடுத்துள்ளீர்கள், இதைவிட பெரிய, வசதியினை இடத்தைக் கொடுங்கள், அந்த டைனிங் டேபிளை மாற்றுங்கள், ஆணைய அறை நீதிமன்ற தோற்றம் போல் இருக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.
அனைத்து சாட்சிகளையும் விசாரிக்க கோரும் அப்போலோ கோரிக்கை தமிழகம் எதிர்ப்பு
தமிழக அரசு தரப்பில் அளித்த பதிலில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது, அனைத்து சாட்சிகளையும் விசாரிக்க வேண்டும் என்று கூறுவது விசாரணையை இழுத்தடிப்பதாகும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "அனைத்து சாட்சிகளையும் விசாரிப்பது என்பதை ஏற்க முடியாது, அதேவேளையில் எத்தனை சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்ற பட்டியலைக் கொடுங்கள், மேலும் இது போன்று அனைத்து சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று கூறுவது நேர விரயம், வழக்கை இழுத்தடிப்பது என்று தமிழக அரசு கூறுவதை ஏற்கிறோம்" எந்த எந்த சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவேண்டும் என்ற பட்டியலை தர அப்பல்லோவிற்கு அனுமதி அளிக்கிறோம்" என்று தெரிவித்தனர்.
ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணர் குழு -தமிழக தரப்பு
தமிழக அரசு தரப்பில் " நாங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநருடன் பேசி ஆணையத்திற்கு உதவ மருத்துவ குழுவில் இடம் பெறுபவர்களை தேர்ந்தெடுக்கிறோம் எனத் தெரிவித்தது.
ஆறுமுக சாமி ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வைத்த கோரிக்கையில், " விசாரணையின் போது அனைத்து தரப்பும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தொடர்ந்து விசாரணையை இழுத்தடிக்க முயற்சிக்க கூடாது" என்று கேட்டுக்கொண்டனர்.
ஆறுமுக சாமி ஆணையத்துக்கு உதவ உச்ச நீதிமன்றம் உத்தரவு
அதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு துணையாக மருத்துவ குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்து, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது.