நாங்க இருக்கோம்.. நீங்க வாங்க.. பிரகாஷ் ராஜுக்காக களத்தில் குதித்த ஜிக்னேஷ் மேவானி!
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜுக்கு குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜுக்கு குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆதரவு தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வென்று ஆட்சியை பிடித்தது. ஆனால் அங்கு சுயேட்சை எம்எல்ஏவான ஜிக்னேஷ் மேவானி அபாரமாக வெற்றிபெற்றார்.
இவரின் வெற்றி பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பிரதமர் மோடிக்கு எதிராக பேசி வரும் இவர் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளார்.
என்ன டிவிட்
பிரகாஷ்ராஜ் தேர்தலில் நிற்க போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட் செய்துள்ளார். அதில், இந்த வருடம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போகிறேன், எங்கு போட்டியிடுவேன் என்பதை பின்பு அறிவிக்கிறேன். மக்களின் ஆட்சி இனி அமையும் என்று ''மோடியின் ஆப்கி பார் மோடி சர்க்கார்'' வசனத்தை மாற்றி ''ஆப்கி பார் ஜனதா சர்க்கார்'' என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பேன், என்றும் தைரியமாக தெரிவித்துள்ளார்.
|
ஜிக்னேஷ் வரவேற்பு
இந்த நிலையில் இதுகுறித்து தற்போது குஜராத் சுயேச்சை எம்எல்ஏ கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் தனது டிவிட்டில் ''என்னவொரு செய்தி! பிரகாஷ் ராஜுக்கு வாழ்த்துகள். நாம் இதை செய்து காட்டுவோம். நமக்கு இந்தியாவில் தெரிந்தவர்கள்,முக்கியமாக தென்னிந்தியாவில் தெரிந்தவர்கள் எல்லோரும் உங்களுக்காக வருவார்கள். நீங்கள் சாதிப்பீர்கள், நான் இருக்கிறேன் உங்களுக்கு. இந்திய நாடாளுமன்றத்திற்கு நீங்கள் தேவை, குரலற்றவர்களின் குரலாக நீங்கள் இருப்பீர்கள்.. என் அன்புகள்'' என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே நண்பர்கள்
குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ.வான ஜிக்னேஷ் மேவானி, நடிகர் பிரகாஷ் ஆகியோர் ஏற்கனவே நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடந்த போது இவர்கள் இருவரும் இணைந்து பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போதே இந்த பிரச்சாரம் பெரிய வைரலானது.
பிரச்சாரம் செய்ய வாய்ப்பு
இந்தநிலையில் குஜராத் வட்கம் தொகுதி சுயேச்சை எம்எல்ஏவான ஜிக்னேஷ் மேவானி பிரகாஷ்ராஜுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவும் வாய்ப்புள்ளது. தேர்தல் சமயத்தில் அவர் களமிறங்கி பிரச்சாரம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் இருவரும் ஒன்றாகி இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.